சிதம்பரத்தில் திருவாதிரை தேரோட்டம் ஆயிரக்கணக்கானோர்: இன்று ஆருத்ரா தரிசனம்
சிதம்பரம்: சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நடைபெற்ற மார்கழி மாத ஆருத்ரா தரிசன தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். முக்கிய திருவிழாவான ஆருத்ரா தரிசன விழா இன்று நடைபெறுவதை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று சிதம்பரத்தில் குவிந்துள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் பஞ்சசபையில் பொற்சபை என்று போற்றப்படுகிறது. இங்கு மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா, கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமி வீதி உலா நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணிக்கு சிவகாம சுந்தரி அம்பாள் சமேத நடராஜர் மூர்த்தி சுவாமிகள் கோயிலின் சித்சபைக்கு கொண்டுவரப்பட்டனர். அங்கிருந்து காலை 6 மணிக்கு நடராஜர், சிவகாம சுந்தரி, சண்டிகேசுவரர், விநாயகர், முருகன் ஆகிய சாமிகள் தனித்தனித் தேரில் எழுந்தருளினார்கள்.
தேரோட்டத்தில் பக்தர்கள்
சிறப்பு பூஜைகள் முடிந்து காலை 9 மணிக்கு மேளதாளம் முழங்க, வேத மந்திரங்கள் ஓத தேர்கள் புறப்பட்டன. தேரோட்டத்தில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். நேற்று இரவு தேர் நிலையை அடைந்தது. நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாள் தேரில் இருந்து கோயிலின் ராஜ்யசபை எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு நேற்று இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் மற்றும் லட்சார்ச்சனை நடைபெற்றன.
சிதம்பரம் ஆருத்ரா தரிசனம்
அதன் தொடர்ச்சியாக, இன்று சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு சிவகாமசுந்தரி அம்பாள், நடராஜர் மூர்த்திக்கு மகா அபிஷேகமும், 5 மணிக்கு புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்கு திரு ஆபரண அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பகல் 1 மணிக்கு பஞ்சமூர்த்தி வீதி உலா, 2.30 மணிக்கு ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெற உள்ளதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர் இதனால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை தாமிரசபை
தமிழகத்தில் நடராஜர் ஆருத்ரா தரிசன தாண்டமாடிய பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிரசபை திருநெல்வேலியில் தாமிரபரணி நதிக்கரையில் ராஜவல்லிபுரம் அருகே செப்பறையில் அமைந்துள்ளது. செப்பறை என்பது செப்பு தகடுகளால் வேயப்பட்ட தலமாகும். உலகின் முதல் நடராஜமூர்த்தி கோயில் கொண்டுள்ள தலமாகக் கருதப்படுகிறது. சுற்றிலும் விவசாய நிலங்கள் சூழ்ந்த, குடியிருப்புபகுதிகளே இல்லாத ஏகாந்தமான வயல்வெளியில் அமைந்துள்ளது இக்கோயில். இங்கு மகாவிஷ்ணு, அக்னி பகவான், அகஸ்தியர், வாமதேவரிஷி, மணப்படை வீடு மன்னன் ஆகியோருக்கு சிவபெருமான் நடனக் காட்சி அளித்தது சிறப்புடையது. இங்கு அமைந்துள்ள நடராஜர் சிலைதான்.
மகா தேரோட்டம்
சிவாலயங்களில், முதன்முதலாக வடிவமைக்கப்பட்ட நடராஜர் சிலை என ஸ்தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது.அழகிய கூத்தர் பெருமானுக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் திருவாதிரைத் திருவிழா நடக்கிறது. டிசம்பர்17ம் தேதி காலையில் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடந்தது. பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அழகிய கூத்தர் தேருக்கு எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது. கோயிலைச் சுற்றியுள்ள ரத வீதிகளில் வலம் வந்த தேர் மீண்டும் நிலையை அடைந்தது.
நெல்லையில் ஆருத்ரா தரிசனம்
தாமிரசபையில் எழுந்துள்ள நடராஜருக்கு இன்று திருவாதிரை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. அதிகாலை 2 மணிக்கு மஹா அபிஷேகம், 5.30 மணிக்கு கோ பூஜை, ஆருத்ரா தரிசனம், நடைபெற்றது. திருநெல்வேலி, நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலிலும் அதிகாலையில் ஆருத்ரா தரிசன காட்சி நடைபெற்றதை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.