கனமழை எதிரொலி: சோழவரம் ஏரிக்கரையில் 40 அடிக்கு விரிசல் - ஏரி உடையும் அபாயம்
சென்னை: கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் சோழவரம் ஏரியில் 40 அடி தூரத்திற்கு விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த ஏரி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. இதன் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது இதில் 737 மில்லியன் கன அடி நீர் உள்ளது. மழைநீர் மூலமாக மேலும் 2,411 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்காக நாள்தோறும் விநாடிக்கு 50 கன அடி நீர் அனுப்பப்படுகிறது.
இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 881 மில்லியன் கன அடி. தற்போது 267 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. மழைநீர் 822 கன அடி வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சோழவரம் ஏரியின் மதகு பகுதியில் 40 அடி தூரத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சோழவரம் ஏரிக்கு அதிகாரிகளுடன் நேரில் சென்று அம்மாவட்ட ஆட்சியாளர் வீரராகவராவ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சோழவரம் ஏரியை பலப்படுத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
நேற்று முன்தினம் மாலை சோழவரம் ஏரிக்கரையில் 40 அடி தூரத்தில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. கனமழை காரணமாக ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஏரி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.