ஆர்.கே.நகரில் 'மதசார்பின்மை காவலர்' டிடிவி தினகரனுக்கு ஆதரவு.. கிறிஸ்தவ கூட்டமைப்பு தீர்மானம்!
சென்னை: ஆர் கே நகர் இடைத் தேர்தலில் அதிமுக அம்மா அணியில் போட்டியிடும் டிடிவி தினகரனை ஆதரிப்பது என அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் கூட்டமைப்பின் தலைவர் விக்டர் தர்மராஜ் தலைமையில் நடைப்பெற்றது.
அமைச்சர் பெஞ்சமின், நாடாளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்யானந்த், ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை, இந்தோ இந்தியன் கிறிஸ்டியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் முன்னாள் தலைவர் டாக்டர் ரெட்டி வித்தியானந்தன், போதகர் அன்புராஜ் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் பெஞ்சமின், சிறுபான்மையிருக்கு பாதுகாப்பு அரணாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தது போன்று டிடிவி தினகரன் செயல்படுவார் என்பதால், அவருக்கு அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
விஜிலா சத்தியானந்த்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு ஆட்சி நடக்க வேண்டும் என்றால் டிடிவி தினகரனை ஆதரிப்பது அவசியம்.
எம்.எல்.ஏ இன்பதுரை: தமிழகத்தில் பாஜக காலூன்ற இடம் கொடுத்துவிடக் கூடாது, ஓ. பன்னீர் செல்வம் அணிக்கு ஆதரவாக அளித்தால் அது மறைமுகமாக பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக ஆகிவிடும்.
விக்டர் தர்மராஜ்: சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதிமுகவுக்கே சிறுப்பான்மையினர் ஆதரவு அளிப்பது வழக்கம். இந்த தேர்தலில், அதிமுக துணைப்பொதுசெயலாளர் டிடிவி தினகரனுக்கே அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பினர் ஆதரவு அளிப்பார்கள்.
டிடிவி தினகரனை வெற்றி பெறச் செய்ய, அனைத்து கிறிஸ்துவ கூட்டமைப்பு சார்பில், ஆர்.கே.நகர் தொகுதியில், வீடுகள் தோறும் சென்று பிரச்சாரம் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது.