திமுகவுக்கு ஆதரவு.. காங்கிரஸ் எம்எல்ஏக்களும் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு
திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
சென்னை: திமுக எம்எல்ஏ-க்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடத்தப்படாமலேயே பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவு பெற்றது. இதைத் தொடர்ந்து திமுக கோரிக்கை மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் தமிழக சட்டசபை ஜூன் 14 முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை கூடுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. விவசாயிகள் பிரச்சினை, நீட் தேர்வு, கூவத்தூர் பேரம் உள்ளிட்ட ஏராளமான பிரச்சினைகளுடன் திமுக எம்எல்ஏ-க்கள் சட்டசபைக்கு வந்தனர்.
அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூவை தெர்மாகோல், தெர்மாகோல் என்று எதிர்க்கட்சிகள் ஓட்டியதால் அவையில் சிரிப்பலை எழுந்தது. கூவத்தூரில் குதிரை பேரம் நடந்ததாக வெளியான வீடியோ குறித்து விவாதிக்க சபாநாயகர் மறுத்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து திமுக எம்எல்ஏ-க்கள் Mla for Sale என்ற பதாகைகளுடன் திமுக எம்எல்ஏ-க்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து சபாநாயகர் திமுக உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் பெயரை படித்து அவரை வெளியேற்றுமாறு காவலர்களை கேட்டுக் கொண்டார்.
அதன்படி திமுக எம்எல்ஏ-க்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.