காங்கிரஸ் மேலிடத்தின் அக்கறையின்மையே நாங்கள் வெளியேற காரணம்- எஸ்.ஆர். பாலசுப்ரமணியன்
கோவை: காங்கிரஸ் கட்சித் தலைமை தமிழக பிரச்னைகளிலும், தமிழகத்தில் ஏற்பட்ட உட்கட்சிப் பிரச்னைகளிலும் போதிய அக்கறை செலுத்தாததால் தனிக்கட்சி அமைக்க வேண்டிய நிலைமை உருவானதாக ஜி.கே.வாசன் ஆதரவாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.ஆர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், "தமிழகத்தில் கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் 21 சதவீதமாக இருந்து வந்தது.
ஆனால் காங்கிரஸ் கட்சி தலைமை, தொடர்ந்து தமிழக பிரச்னைகளில் போதிய அக்கறை செலுத்தாததால் வாக்கு சதவீதம் குறையத் துவங்கியது.
தமிழகம் சார்ந்த பிரச்னைகளிலும், தமிழக காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பிரச்னைகளிலும் போதிய கவனம் செலுத்தாததன் காரணமாக தற்போது காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் வெறும் 5 சதவீதமாக குறைந்து போனது. தேர்தல் கூட்டணி தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதில் கட்சி மேலிடத்தின் செயல்பாடற்ற தன்மையாலும் வாக்கு சதவீதம் குறைந்து போனது.
தமிழகத்தில் மட்டுமின்றி, மற்ற மாநிலங்களிலும் இதே நிலைதான் நிலவுகிறது. கட்சி தலைமையின் இந்த நடவடிக்கையால் அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டு, தனி இயக்கம் உருவாக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
வாசன் தலைமையிலான புதிய கட்சியின் பெயர், கொடி ஆகியவை திருச்சி பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும். அதன்பின்னர் தேர்தல் குறித்தெல்லாம் விவாதிக்கப்படும். புதிய இயக்கத்துக்கு அனைத்து தரப்பு மக்களிடமும் ஆதரவு கேட்டு வருகிறோம் " என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications