குற்றாலத்தில் களை கட்டிய சீசன்.. ஆட்டோ ஓட்டுனர்களுக்கு 9 கட்டுப்பாடுகளை விதித்தது போலீஸ்
தென்காசி: குற்றாலத்தில் சீசன் களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை நெல்லை மாவட்ட காவல் துறை விதித்துள்ளது.
குற்றாலத்தில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரை சீசன் காலமாகும். இந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்திலேயே சீசன் துவங்கியது. கடந்த ஒரு மாதத்தில் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட அளவு மட்டுமே சாரல் பெய்துள்ளது. மீதி நாட்களில் மந்தமான நிலையிலேயே காணப்பட்டது.
கடந்த இரு தினங்கள் விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு மெயின் அருவியில் தண்ணீர் விழவில்லை. ஐந்தருவியில் ஓரளவுக்கு தண்ணீர் கொட்டியது. அங்கு சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளி்த்து மகிழ்ந்தனர்.
இதனிடையே நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் குற்றாலத்தில் இயங்கிவரும் வாடகை ஆட்டோ ஓட்டுனர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்ட்த்தில் அதிகக் கட்டணங்கள் வசூலிக்கக்கூடாது. அனுமதிக்கப்பட்ட பயணிகள் 3 பேரைத் தவிர அதிக ஆட்களை ஏற்றக்கூடாது. ஆட்டோக்களில் பிறருக்கு இடைஞ்சல் செய்யும் வண்ணம் செயல்படக் கூடாது.
ஆட்டோக்களில் அதிக சப்தம் எழுப்பும் சினிமா பாடல்களை ஒலிக்கக்கூடாது. குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டக் கூடாது. குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஆட்டோக்களை நிறுத்த வேண்டும். ஆட்டோ ஓட்டுனர்கள் ஒழுக்கத்தோடு ஓட்டுனருக்குரிய உடையணிந்து ஆட்டோக்களை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புக்கள் குறித்து காவல்துறை ஆய்வாளர் ஜானகி ஆட்டோ ஓட்டுனர்ளோடு நடந்த ஆலோசனைக்கு கூட்டத்தில் பேசினார்.