மணல், கிரானைட் குவாரிகளை திறக்க வேண்டும்... மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்
மணல், கிரானைட் குவாரிகளை திறக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
சென்னை: தடை செய்யப்பட்ட மணல், கிரானைட் குவாரிகளை திறக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் தமிழக அமைச்சர் சிவி சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
சுற்றுச்சூழல் துறையின் தடையில்லா சான்று இல்லாமல் தமிழகத்தில் இயங்கி வந்த 2048 மணல் மற்றும் கிரானைட் குவாரிகளை மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றமும், தேசிய பசுமை தீர்ப்பாயமும் உத்தரவிட்டது.
இதனால் 2.50 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். கட்டுமானத்துக்கு தேவையான மணல் கிடைக்காமல் கட்டுமான பொருள்களும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த காரணங்களை தமிழக அரசு , தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் மேல் முறையீடு செய்தது.
அப்போது படிப்படியாக சுற்றுச்சூழல் துறையின் தடையில்லா சான்றுகளை பெற்றுக் கொண்டு குவாரிகள் இயங்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தனை தமிழக அமைச்சர் சிவி சண்முகம் டெல்லியில் சந்தித்தார். அப்போது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை சுட்டிக் காட்டி சிறப்பு குழுவை அமைத்து தடை செய்யப்பட்ட குவாரிகள் இயங்க தடையில்லா சான்று வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஹர்ஷவர்த்தனும் உறுதியளித்ததாக சிவி சண்முகம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் இதன் மூலம் தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு நீங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.