இளங்காத்து வீசுதே.. தமிழகத்தை நனைத்து சென்ற மழை.. நாளைக்கு இங்கெல்லாம் நல்ல மழை இருக்காம்
சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களை இன்று வெப்பகாற்றுகள் அலறைவைத்து சென்ற அதேநேரம் மாலை வேளையில் சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்துவிட்டு சென்றுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அனல் காற்று வீசுவதோடு, இரவில் புழுக்கம் நீடித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதுமே ஓரளவுக்கு வெப்பம் குறைந்து காணப்பட்டது. வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து இருந்தது.
தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மாலை பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் பெய்தது.இதன் காரணமாக பல இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் அவதிப்பட்டனர்.
திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் காற்றுடன் மிதமான மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்து காணப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் குளிர்ச்சியாக மாறியது.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், திருச்சி, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications