அரசியலுக்கு லாயக்கே இல்லாத தினகரன்... வந்திருக்கவே கூடாது.... முத்தரசன் அட்டாக்
அரசியலுக்கு லாயக்கு இல்லாதவர் தினகரன் என்று சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக அம்மா கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் தினகரன் தற்போது டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அரசியலுக்கு பொருத்தமற்றவர்கள் என்று சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் தாக்கியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறைக்கு சென்ற பின்னர் துணைப் பொதுச் செயலாளராக தினகரன் பொறுப்பேற்றார். அதில் இருந்து அவருக்கு அடிமேல் அடித்தான். தற்போது இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன் கூறியதாவது:
குழப்பம்
தமிழகத்தில் தவறு செய்தவர்கள் மீது வருமான வரித்துறையும், தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுத்து வருகிறதா அல்லது இந்தத் துறைகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறதா என்று குழப்பமாக இருக்கிறது.
பாஜக கட்டுக்குள்..
தமிழகத்தை பாஜக கட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சி செய்து வருகிறது. தமிழகத்தில் ஆட்சியும், ஆளும் கட்சியும் தனது சொல்படி நடக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. அதற்கான அனைத்து செயல்களையும் மோடி அரசு செய்து வருகிறது.
லாயக்கற்றவர்
சூது நிறைந்த அரசியலுக்குள் வர தியாக மனப்பான்மை மற்றும் சேவை மனப்பான்மை அவசியம். அப்படி உள்ளவர்கள் மட்டுமே அரசியலுக்கு வர வேண்டும். இதற்கு சற்றும் பொருத்தமில்லாதவர் தினகரன். அவர் அரசியலுக்கு வந்திருக்கக் கூடாது.
உள்ளாட்சித் தேர்தல்
நீண்ட காலமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. மாநில அரசு அதனை நடத்த முயற்சிக்க வேண்டும். தமிழகத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்து, வறட்சி நிவாரணத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று முத்தரசன் கூறினார்.