தினகரன் மீது கடும் கோபத்தில் தேமுதிக தொண்டர்கள்.. போஸ்டர் ஒட்டுன ஈரம் காயல.. கட்சி தாவலால் அப்செட்!
கோவை : தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ தினகரனின் படம், விஜயகாந்த் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்களில் இடம்பெற்றிருந்த நிலையில், திடீரென அவர் கட்சி மாறியதால், கடுப்பான தேமுதிக தொண்டர்கள் போஸ்டர்களில் கறுப்பு மை பூசியுள்ளனர்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சியினர், கோவை தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான தினகரன் படத்துடன் போஸ்டர்கள் அடித்து, சூலுார் முழுக்க ஒட்டியிருந்தனர்.
இதற்கிடையில், பொள்ளாச்சியில் நடந்த கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தினகரன் தி.மு.கவில் இணைந்தார். இதனால் சூலுார் தே.மு.தி.கவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
தாங்கள் ஒட்டிய போஸ்டரில் இருந்த தினகரன் படங்களை, கறுப்பு மை பூசி மறைத்தனர். சுவர் விளம்பரங்களிலும் தினகரனின் பெயரை அழித்தனர்.
தேசிய கொடி கம்பீரமா பறக்குது! ஆனா எங்க கேப்டன்! விஜயகாந்தைப் பார்த்து கண்கலங்கிய தேமுதிக தொண்டர்கள்!
கோவை திமுக
கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு பல கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்து, புதியதாக தொடங்க இருக்கும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பொள்ளாச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாற்றுக்கட்சிகளில் இருந்து 55,000 பேர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஏற்பாட்டின் பேரில் இந்த இணைப்பு நடந்தது. அதிமுக, தேமுதிக, பாஜக என பல கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும் திமுகவில் இணைந்தனர்.
தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ
தேமுதிக கோவை தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சூலூர் சட்டமன்ற உறுப்பினருமான தினகரனும் திமுகவில் இணைந்தார். கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் தொகுதியில் 2011 முதல் 2016 வரை எம்.எல்.ஏவாக இருந்தவர் தேமுதிகவின் பனப்பட்டி தினகரன். கட்சி பலம் தாண்டி லோக்கலிலும் செல்வாக்கு மிக்கவர். அதன் காரணமாக 2016 தேர்தல் மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்டபோதும் கணிசமான வாக்குகளைப் பெற்றார்.
திமுகவிற்கு தாவல்
சமீபகாலமாக, விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக தேமுதிக தலைமை செயல்பாட்டில் அதிருப்தியில் இருந்து வந்த கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தினகரன், செந்தில் பாலாஜியின் ஸ்கெட்ச்சில் சிக்கினார். இதையடுத்து, ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தினகரன், திமுகவில் இணைந்தது சூலூர் பகுதி தேமுதிகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விஜயகாந்த் பிறந்தநாளுக்கு
ஆகஸ்ட் 25ஆம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி சூலூர் பகுதி தேமுதிகவினர், நகர் முழுக்க போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். அதில் சூலூர் தினகரனின் படமும் இடம்பெற்றிருந்தது. சரியாக அதற்கு முந்தைய நாள் தினகரன், திமுகவிற்குத் தாவினார். இதனால் சூலுார் தேமுதிகவினர் கடும் கோபமடைந்தனர். விஜயகாந்த் பிறந்தநாளுக்கு ஒட்டிய போஸ்டர் ஈரம் காய்வதற்குள் தினகரன் கட்சி தாவிவிட்டார் என அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளர்.
கறுப்பு மை
தினகரன் கட்சி தாவியதால் அதிர்ச்சி அடைந்த சூலுார் பகுதி தேமுதிகவினர், தாங்கள் ஒட்டிய போஸ்டர்களில் இருந்த தினகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர் பரமசிவன் ஆகியோரின் படங்களை, கருப்பு மை பூசி மறைத்தனர். சுவர் விளம்பரங்களிலும் முன்னாள் எம்.எல்.ஏ தினகரனின் பெயரை அழித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.