சட்டையை பிடித்து கிழித்து.. சேரை வீசி.. திமுக - அதிமுக மோதல்.. கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு
ராணிப்பேட்டை: இன்று ஆற்காட்டில் நடந்த கிராமசபை கூட்டத்தில் திமுகவினர் மற்றும் அதிமுகவினர் திடீரென மோதி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிராம சபை கூட்டங்களில் பொதுவாக வாய் தகராறு வருவது சகஜமான ஒன்றுதான். ஆனால் இது வாக்குவாதமாக முற்றி கைகலப்பு வரை சென்றதால் அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு அதிமுக அதிகம் செல்வாக்குள்ள பகுதி. ஆனால் பேட்டையை பொறுத்தவரையில் திமுகதான் எல்லாமே. இவ்வாறு இருக்கையில் இவர்களுக்கிடையே சண்டை உருவாகியுள்ளது காவல்துறையினருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக திட்டங்களை பொறுக்க முடியவில்லை.. அமைச்சர்கள் பேச்சை பெரிதாக்க இதுதான் காரணம்.. அப்பாவு கருத்து
தலைவர்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த பெரிய குக்குண்டி கிராமத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தலைவராக அதிமுகவை சேர்ந்த மீரா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல துணைத் தலைவராக திமுகவை சேர்ந்த சரஸ்வதி தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுவாக ஒரே கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலே அதிகாரப் போட்டி காரணமாக பல்வேறு சர்ச்சைகள் ஏற்படுவது வழக்கம். ஆனால் இதில் இரண்டு கட்சியை சேர்ந்தவர்கள் பொறுப்புகளுக்கு தேர்வாகியுள்ளதால் இருவரிடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்துள்ளது.
துணை தலைவர்
நிலைமை இவ்வாறு இருக்க துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வஜ்ரவேல் தலைமையில் இன்று கிராமசபைக் கூட்டம் அப்பகுதியில் நடைபெற்றுள்ளது. கூட்டத்தில் அவ்வப்போது இரு தரப்பின் ஆதரவாளர்களும் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு இருக்கையில், திடீரென கூட்டத்தில் துணை தலைவரின் ஆதரவாளர் ஒருவர் தலைவர் மீராவை தகாத வார்த்தைகளால் பேசியதாக சொல்லப்படுகிறது. இதுவரை ஒருவரையொருவர் மாறி மாறி திட்டிக்கொண்டிருந்த நிலையில் இந்த சம்பவத்தையடுத்து இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட தொடங்கிவிட்டனர்.
மோதல்
இதனால் கூட்டம் பாதியிலேயே கலைந்தது. பங்கேற்க வந்த மக்களும் பதறியடித்துகொண்டு வெளியேறிவிட்டனர். ஒரு சிலர் சண்டையை சமாதானமாக்க முயன்றுள்ளனர். ஆனால் சமாதானம் செய்ய வந்தவர்கள் மீதும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதால் காவல்நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆற்காடு நகர காவல்துறையினர், இரு தரப்பினரையும் தடுத்தனர். பின்னர் பேச்சு வார்த்தை மூலம் மோதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
சமாதானம்
பொதுப் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் இடம் என நம்பி வந்த பொதுமக்களுக்கு, திமுக-அதிமுகவினரின் மோதல் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு வந்த நிலையில் அப்பகுதியில் பதற்றத்தை தணிக்க பாதுகாப்புக்காக காவலர்கள் சிலர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.