ஸ்டாலினின் கலந்துரையாடல் கூட்டங்களுக்கு எதிராக திமுகவில் போர்க்கொடி!
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் நடத்தி வரும் தொண்டர்களுடனான கலந்துரையாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புகார் கடிதங்கள் குவிந்து வருவதாக அண்ணா அறிவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுகவில் இருந்து மு.க. அழகிரி டிஸ்மிஸ் செய்யப்பட்டாலும் அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படும் நிலை உருவாகி உள்ளது. அப்படி மு.க. அழகிரி கட்சியில் சேர்ந்தால் அவருடன் கனிமொழி கை கோர்க்கும் போது அது ஸ்டாலினுக்கு சிக்கலாக அமையலாம்.
அழகிரியை சேர்க்க எதிர்ப்பு
இதனால் அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் ஸ்டாலின். இந்த நிலையில்தான் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கக் கோரி அமைப்பு செயலராக இருந்த கலியாணசுந்தரம் திமுக தலைமைக்கு கடிதம் அனுப்பினார்.
கலியாணசுந்தரம் டிஸ்மிஸ்
இந்த கடிதத்தால் கோபமடைந்த கருணாநிதி, கலியாணசுந்தரத்தை உடனே கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்ய உத்தரவிட்டார். இது ஸ்டாலின் ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
முதல்வர் வேட்பாளர்
இதனால் 2016 சட்டசபை தேர்தலில் திமுகவின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின்தான் என்று அறிவிக்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு கடிதங்களையும் தொடர்ந்து அனுப்பிவருகின்றனர்.
தொண்டர்கள் சந்திப்பு
இதனிடையே 'தொண்டர்களுடன்' தாம் நெருக்கமாக இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்த ஒரு பதவியிலும் இல்லாத தொண்டர்களை தேர்ந்தெடுத்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆனால் இந்த ஆலோசனைக் கூட்டங்களுக்கும் கூட திமுகவில் எதிர்ப்பு தெரிவித்து அறிவாலயத்துக்கு புகார் கடிதங்கள் குவிகின்றதாம்.
ஸ்டாலினுக்கு எதிர்ப்பு
மாவட்ட செயலாளர்களாக இருப்பவர்கள் தேர்ந்தெடுக்கும் நபர்களுடன் தான் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். அந்த நபர்கள் எப்படி மாவட்ட செயலாளர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்துவார்கள்? என்பதுதான் ஆதங்க தரப்பின் கோபம். இதையே கடிதமாக அறிவாலயத்துக்கும் அனுப்பி வைத்துள்ளனர். இதனால் ஸ்டாலின் கடுமையான அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.