பணிப் பதிவு அட்டைகளுக்குள் பணம்: அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அரியலூர்: 100 நாள் பணிப்பதிவு அட்டைகளுக்குள் வைத்து ஓட்டுக்கு பணம் வழங்கிய அ.தி.மு.க.வினரை கைது செய்ய கோரி தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாடளுமன்ற தேர்தல் களம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு பணத்தை வாக்காளர்களுக்கு பணத்தை பல வழிகளில் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அரியலூர் மாவட்டம் செந்துறையில் காலணி குடியிருப்பு பகுதிகளில் 100 நாள் வேளைக்கு சென்ற தொழிலாளர்களுக்கு தலா 200 ரூபாய் பணத்தை பணி பதிவு அட்டையின் உள்ளே வைத்து அ.தி.மு.க.வினர் வழங்கியுள்ளனர்.
அட்டைகள் பறிமுதல்
இந்த தகவல் அந்த பகுதியில் பரவியதால், அங்கே பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், விநியோகம் செய்ய வைத்திருந்த 75க்கும் மேற்பட்ட பணத்துடன் கூடிய பணிப்பதிவு அட்டைகளை அவர்கள் கைப்பற்றினர்.
சாலை மறியல்
இதைத்தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகள் மீறி அ.தி.மு.க.வினர் பண பட்டுவாடா செய்கிறார்கள். அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி அரியலூர்- செந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதிகாரிகள் உறுதி
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செந்துறை காவல்துறையினர், கண்டிப்பாக அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தா.பாண்டியன் குற்றச்சாட்டு
இதேபோல நாகப்பட்டினம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக கையும் களவுமாக பிடித்துக் கொடுத்தும் ஆளுங்கட்சியினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தா. பாண்டியன் குற்றம் சாட்டினார்.
தேனியில் பொன் முத்துராமலிங்கம் மறியல்
வாக்காளர்களுக்ககு பணம் வழங்கிய அ.தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி தேனி தொகுதி தி.மு.க.,வேட்பாளர் பொன் முத்துராமலிங்கம் உள்ளிட்ட கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கார் ஜப்தி
தண்புபாளையத்தில் அ.தி.மு.க.,வினர் பணம் விநியோகம் செய்த போது, பணத்தை பொன் முத்துராமலிங்கம் பறிமுதல் செய்து, அதனையும் காரையும் ஜப்தி செய்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.