ஜெயலலிதாவிற்கு எம்பாமிங் செய்த போது கால்கள் இருந்ததா? நீதிபதியிடம் டாக்டர் விளக்கம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் எம்பாமிங் செய்யப்பட்டது குறித்து விசாரணை ஆணையத்தில் சுதா சேஷய்யன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
Recommended Video
சென்னை: ஜெயலலிதாவுக்கு உயிர் பிரிந்தது எப்போது, எம்பாமிங் பண்ணும்போது கால்கள் இருந்ததா என்று அரசு டாக்டரிடம் நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்ததாக கூறப்பட்டது. டிசம்பர் 6ஆம் தேதி அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் உடலை பார்த்தவர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. காரணம், பொலிவுடன் இருந்தது ஜெயலலிதாவின் முகம். இதற்குக் காரணம் அவரது கன்னத்தில் காணப்பட்ட 4 புள்ளிகள்தானாம். எம்பாமிங் முறையில் அவரது உடல் பதப்படுத்தப்பட்டது
நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் கால்கள் நீக்கப்பட்டதாகவும் அதனால் தான் அவருடைய உடல் எம்பாமிங் பண்ணப்பட்டதாகவும் பல்வேறு வதந்திகள் பரவியது. பொதுமக்கள் மத்தியில் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சியினரும் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் எழுப்பி வந்தனர். இந்த சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அரசு சார்பில் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
ஆணையம் சம்மன்
இந்த கமிஷன் இதுவரை பலருக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பி விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதா இறந்த பிறகு எம்பாமிங் செய்ய எம்எம்சி மருத்துவர் சுதா சேஷையன் தலைமையில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவர் சுதா சேஷையனுக்கு விசாரணை ஆணையம் கடந்த 26ம் தேதி சம்மன் அனுப்பியது. அதன்பேரில் டாக்டர் சுதா சேஷையன் நேற்று காலை 10.10 மணியளவில் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.
எம்பாமிங் பற்றி கேள்வி
அவரிடம் நீதிபதி 2 மணி நேரம் சரமாரி கேள்வி எழுப்பினார். அவரிடம், ஜெயலலிதாவுக்கு எம்பார்மிங் செய்த போது உங்கள் தலைமையிலான குழுவில் எத்தனை பேர் இருந்தனர். ஜெயலலிதாவுக்கு எப்போது உயிர் பிரிந்தது, ஜெயலலிதாவின் உடல் எப்போது, எந்த நேரத்தில் எம்பாமிங் செய்யப்பட்டது, இதற்கான அனுமதியை யார் உங்களுக்கு வழங்கினர்.
நீதிபதி கேள்வி
எம்பாமிங் செய்யும்போது ஜெயலலிதாவின் ரத்த உறவுகள் யாரேனும் உடன் இருந்தார்களா அல்லது அரசு சார்பில் யாரேனும் இருந்தார்களா, எதற்காக ஜெயலலிதா உடல் எம்பாமிங் செய்யப்பட்டது. எம்பாமிங் பண்ணும் போது ஜெயலலிதாவுக்கு கால்கள் இருந்ததா? என்று பல்வேறு கேள்விகளை நீதிபதி எழுப்பியதாகவும், அதற்கு டாக்டர் சுதா சேஷையன் பதில் அளித்ததாகவும். அவர் அளித்த பதிலை நீதிபதி பதிவு செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
நடந்ததை கூறினேன
செய்தியாளர்களிடம் பேசிய சுதா சேஷையன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி இறந்த பிறகு எம்பாமிங் செய்தது குறித்து கேட்டார்கள். நடந்ததை கூறினேன். அதை பதிவு செய்து கொண்டனர். நீதிபதி எந்தவிதமான நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டது என்று கேட்டார். அந்த விவரத்தையும் நீதிபதியிடம் கூறினேன் அதையும் பதிவு செய்து கொண்டனர்.
எம்பார்மிங் முறை
எம்பாமிங் செய்து குறித்து ஏற்கனவே பத்திரிகையாளரிடம் கூறியிருந்தேன். 15 நிமிடம் முதல் 20 நிமிடம் ஆகும். அந்த விவரத்தை அப்படியே கூறினேன். எவ்வளவு நேரம் எம்பாமிங் செய்யப்பட்டது. என்று கேட்டதற்கு மிஷின் வைத்து பண்ணும் போது 15 நிமிடம் முதல் 20 நிமிடங்கள் போதும் என்று கூறினேன்.
ஜெயலலிதாவை பார்க்கவில்லை
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது மருத்துவமனையில் நான் அவரை சந்திக்கவில்லை. டிசம்பர் 5ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் எனக்கு போன் செய்து, ஜெயலலிதா இறந்த தகவலை தெரிவித்து, அவரது உடல் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு எம்பாமிங் செய்ய வேண்டும் என்று கூறினர். நான் இரவு 11.40 மணியளவில் அப்போலோ மருத்துவமனைக்கு சென்று விட்டேன். 12.20 மணிக்கு எம்பாமிங் செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.
மீண்டும் சர்ச்சை
ஜெயலலிதா இறந்துவிட்டதாக இரவு 10.30 மணிக்கு எனக்கு தொலைபேசியில் தெரிவித்தனர் என்றார். ஆனால், ஜெயலலிதா இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜெயலலிதா எப்போது இறந்தார் என்ற சர்ச்சை மீண்டும் கிளம்பியிருக்கிறது.
விசாரணை ஆணையத்தில் விளக்கம்
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவில் அப்போலோ டாக்டர் சத்யபாமா இடம் பெற்றிருந்தார். அவருக்கு விசாரணை ஆணையம் இன்று ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளது. அதன்படி, இன்று டாக்டர் சத்யபாமா நீதிபதி முன் நேரில் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார்.
பிரதாப் ரெட்டிக்கு ஜன.12 வரை கெடு
ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த விவரங்களை ஒப்படைக்குமாறு அப்போலோ நிறுவனர் பிரதாப் ரெட்டி அவரது மகள் பிரீத்தா ரெட்டி ஆகிய இருவருக்கும் சம்மன் அனுப்பியது. 10 நாட்களுக்குள் ஆதாரங்களை ஒப்படைக்கும்படி அதில் தெரிவித்து இருந்தது. கூடுதல் கால அவகாசம் கோரி அப்போலோ நிர்வாகம் சார்பில் நீதிபதி ஆறுமுகசாமியிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வரும் 12ம் தேதிக்குள் ஆவணங்களை ஒப்படைக்கும் படி விசாரணை ஆணையம் காலஅவகாசம் வழங்கியதாக விசாரணை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.