கறி போட வந்தவரைக் கடித்த நாய்.. கோபத்துடன் வந்து தாக்கிய கும்பல்.. முதியவர், நாய் பலி!
ஈரோடு: ஒரு நாய் கடித்த விவகாரம் கொலையில் முடிந்த சம்பவம் ஈரோடு அருகே பதட்டத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நாய் கடித்தது தொடர்பாக சண்டைக்கு வந்த கும்பல் தாக்கியதில் ஒரு முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பந்தப்பட்ட நாயையும் அக்கும்பல் சரமாரியாக தாக்கிக் கொன்று விட்டது.
மொடக்குறிச்சி அருகிலுள்ள இலக்காபுரம், கொள்ளுக்காட்டுமேட்டை சேர்ந்தவர் வரதராஜ் (62). இவர் ரயில்வேயில் கேட் கீப்பராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடன் மகனும், மகளும் உள்ளனர். மனைவி தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
தனது தங்கை சிவகாமி என்பவரின் வீட்டில் தனது குழந்தைகளை விட்டு வளர்த்து வந்தார் வரதராஜ். இவர் இலக்காபுரத்தில் உள்ள வீ்ட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் வரதராஜ் வீட்டுக்கு அவரது நண்பர் லோகநாதன் மற்றும் அவரது நண்பர் ஒருவர் வந்தனர். மூன்று பேரும் வீட்டில் மது அருந்தியுள்ளனர். வீட்டிலேயே சைட் டிஷ் ரெடி செய்து மூன்று பேரும் உட்கார்ந்து குடித்துள்ளனர்.
போதையில் இருந்த லோகநாதன் வரதராஜ் வீட்டில் இருந்த நாய்க்கு ஆட்டுக்கறித் துண்டு ஒன்றை எடுத்துப் போடப் போனார். அவர் வந்த கோலத்தைப் பார்த்த நாய், அவர் தன்னை அடிக்கத்தான் வருகிறார் போலும் என்று நினைத்து லோகநான் மீது பாய்ந்து கடித்து விட்டது.
வலியால் துடித்த லோகநாதன் உடனடியாக மருத்துவமனைக்குப் போனார். அங்கு சிகிச்சை எடுத்துக் கொண்டார். பின்னர் வரதராஜ் வீட்டுக்கு வந்து தனக்கு சிகிச்சை செலவுக்குப் பணம் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு வரதராஜ் மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த லோகநாதன், திரும்பிப் போனார். போனவர், தனது நண்பர்கள், சங்கர், கார்த்தி, அருள் முருகானந்தன், காட்டு முருகன், செந்தில், ரவி ஆகிய ஏழு பேருடன், உருட்டு கட்டையுடன் வரதராஜ் வீட்டுக்கு வந்தார்.
இந்தக் கும்பல் வரதராஜிடம் பணம் கேட்டு சண்டை பிடித்தது. இதில் பிரச்சினை வலுத்து வரதராஜனை அத்தனை பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் லோகநாதனைக் கடித்த நாயையும் உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளனர்.
இதில் வரதராஜ் மற்றும் நாய் ஆகிய இருவரும் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் கிடைத்து போலீஸார் விரைந்து வந்தனர். லோகநாதன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து அத்தனை பேரையும் கைது செய்தனர்.