3 நாட்களாகியும் மாயமான விமானம் குறித்து தகவல் இல்லை: 3 பேர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு
சென்னை: சென்னையில் இருந்து கிளம்பி மாயமான கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் விமானம் பற்றி இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் விமானத்தில் இருந்த 3 பேர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது.
சென்னையில் இருந்து கடந்த 8ம் தேதி மாலை 6 மணிக்கு பாக் ஜலசந்திக்கு கடலோர காவல்படையைச் சேர்ந்த டோர்னியர் ரக விமானம் ரோந்து பணிக்கு கிளம்பியது. விமானத்தில் விமானி வித்யாசாகர், துணை விமானி எம்.கே.சோனி, திசைகாட்டி சுபாஷ் சுரேஷ் ஆகியோர் இருந்தனர். இந்நிலையில் விமானம் சென்னைக்கு திரும்பி வரும்போது மாயமானது. விமானத்தை தேடும் பணியில் 7 கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.
இருப்பினும் விமானம் பற்றி இதுவரை எந்தவித தகவலும் கிடைக்காததால் அதில் இருந்தவர்கள் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது. புதுச்சேரியில் கடலில் மீன் பிடித்த மீனவர் கொடுத்த தகவலின்பேரில் அங்கு விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து கடலோர காவல்படையின் கிழக்கு மண்டல ஐ.ஜி. எஸ்.பி. சர்மா கூறுகையில்,
விமானம் மாயமானது பற்றி கடலோர காவல்படையின் டைரக்டர் ஜெனரல் எச்.சி.எஸ். பிஸ்த் தலைமையில் புதன்கிழமை ஆலோசனை நடந்தது. அப்போது விமானத்தை தேடும் பணியில் மேலும் 7 கப்பல்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது 2 நீர்மூழ்கி கப்பல்கள் உள்பட 15 கப்பல்கள் விமானத்தை தேடி வருகின்றன. இருப்பினும் விமானம் குறித்து இதுவரை எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என்றார்.
பிச்சாவரம் இடையே 70 கிலோமீட்டர் சுற்றளவில் விமானத்தை தேடி வருகிறார்கள். தேடும் பணியில் 200 அதிகாரிகள், 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று கடலோர காவல்படை குழும டி.எஸ்.பி. ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் புதுச்சேரி அருகே கடலில் எண்ணெய் படலம் மிதப்பது புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டு எண்ணெய் மாதிரி சேகரிக்கப்பட்டு அது மாயமான விமானத்தினுடையதா என்பதை அறிய சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.