நான் தலைமறைவு ஆகமாட்டேன்: ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த வருண்குமார் ஐ.பி.எஸ்
சென்னை: நான் எந்த குற்றமும் செய்யவில்லை, என் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறி வருண்குமார் ஐ.பி.எஸ். ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் வருண்குமார் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவில் கூறியுள்ளதாவது:
''பிரியதர்ஷினி கொடுத்த புகாரின் அடிப்படையில் என் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, மிரட்டல் ஆகிய குற்றங்கள் கீழும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் அடிப்படையிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் வரதட்சணை கொடுமை தடுப்புப்பிரிவு போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து முன்ஜாமீன் பெற்றிருந்தேன். அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பிரியதர்ஷினி மனுதாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நான் ஏப்ரல் 28 ஆம் தேதி சரணடைந்தேன். அன்றே ஜாமீன் மனு தாக்கல் செய்தேன். ஆனால் எனது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் பிரியதர்ஷினி தாக்கல் செய்த மனுவின்படி, எனது ஜாமீன் மனுவை விசாரிப்பதற்கு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்திற்க்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அந்தத்தடை விலக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து எனது ஜாமீன் மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, எனது தரப்பு விவாதங்களை சரிவர கவனிக்காமல் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்.
என் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் எந்த குற்றமும் செய்யவில்லை. ஜாமீன் பெற்றுவிட்டு தலைமறைவு ஆகமாட்டேன். வழக்கின் சாட்சிகளைக் கலைக்கமாட்டேன். எனவே எனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும்" என்று தனது மனுவில் வருண்குமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications