முரசுக்கு வில்லனாகும் கூடை... தேர்தல் கமிஷனிடம் தடை கேட்க தேமுதிக முடிவு
சென்னை: சட்டசபை தேர்தலில் தங்களின் சின்னமான முரசுக்கு போட்டியாக தேமுதிகவினர் அதிகம் அஞ்சுவது சுயேச்சை சின்னமான கூடைக்குத்தானாம். தங்களின் தோல்விக்கு இந்த கூடை சின்னமே காரணமாகிவிடும் என்பதால் கூடை சின்னத்தை நீக்க வேண்டும் அல்லது அந்த சின்னத்தை சுயேச்சைகள் யாருக்கும் ஒதுக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் தேமுதிகவினர் கோரிக்கை வைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிராமப்புறங்களில் வயதானவர்களிடம் வாக்கு கேட்டு செல்லும் போது , நீ உன் பாட்டுக்கு கவலைப்படாம போ நான் கண்ணை மூடிக்கிட்டு ரெட்டை இலையில குத்திடறேன் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு பட்டி தொட்டி எங்கும் மக்கள் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறது அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆர் தேர்வு செய்த சின்னமான இரட்டை இலை.
தனது இரு விரலை காட்டியே சின்னத்தை மனதில் பதிய வைத்ததோடு, வேட்பாளர் யார் நின்றாலும் கவலையில்லை. இரட்டை இலை இருக்கிறதா என்றுதான் வாக்காளர்களின் கண்கள் பெரும்பாலும் தேடுகிறது. அந்த அளவிற்கு ஒரு கட்சியின் சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டியது அவசியமானதாக இருக்கிறது.
இதற்காகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒவ்வொரு முறையும் மாநாடு, கட்சிக்கூட்டங்களில் மக்களை சந்திக்க வரும் போது மிகப்பெரிய முரசை கொட்டி சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைப்பார்.
கொட்டும் முரசு
தேமுதிகவின் முரசு சின்னம் தற்போது மக்கள் மனதில் பதிந்திருந்தாலும் தேமுதிகவிற்கு வாக்களிக்க நினைக்கும் வாக்காளர்களைக் குழப்புவதற்காகவே வில்லனாக முளைத்துள்ளது கூடை சின்னம். கடந்த 2011ல் நடந்த சட்டசபைத் தேர்தலில், கூடை சின்னம் ஏற்படுத்திய குழப்பத்தால் தேமுதிக வேட்பாளர்கள் 2 தொகுதிகளில் தோற்றுப் போனார்கள்.
கிருஷ்ணகிரியில் தோல்வி
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக கந்தன் என்கிற முருகேசன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக மாவட்டச் செயலாளர் செங்குட்டுவன் களமிறங்கினார். முருகேசனை விட செங்குட்டுவன் 7,604 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் உழைப்பாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட ரங்கநாதன் 8,943 ஓட்டுகள் பெற்றார். ரங்கநாதனுக்கு கூடை சின்னம் ஒதுக்கபட்டதுதான் குழப்பத்திற்குக் காரணமாகிவிட்டது.
கூடையில் விழுந்த வாக்குகள்
உழைப்பாளி மக்கள் கட்சிக்கு பெரிய செல்வாக்கு எல்லாம் இல்லை. அவர் போட்டியிட்ட கூடைச் சின்னம் தேமுதிகவின் முரசு சின்னம் போவே இருந்ததால் வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இதனால் முரசு சின்னத்துக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுகள் கூடைக்குள் விழுந்தன. இதனால் தேமுதிகவின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.
செஞ்சியில் தோல்வி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதியில் தேமுதிக வேட்பாளர் ஆர்.சிவலிங்கம் 1,811 ஓட்டுக்கள் வித்தியாசத்தில், பாமக வேட்பாளர் கணேஷ்குமாரிடம் தோற்றுப் போனார். இங்கே சுயேச்சையாக போட்டியிட்ட சிவக்குமாருக்கு கூடை சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் 8,627 வாக்குகள் வாங்கினார். முரசுக்கு விழ வேண்டிய ஓட்டுகள் கூடை சின்னத்துக்கு போனது இப்படித்தான்.
விஜயகாந்த்
விஜயகாந்த் போட்டியிட்ட ரிஷிவந்தியம்கூட இதில் தப்பவில்லை. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 91 ஆயிரத்து 164 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். இங்கே கூடை சின்னத்தில் எம்.விஜயகாந்த் என்ற சுயேட்சை களமிறங்கியிருந்தார். அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்த விஜயகாந்த்தை தோற்கடிக்க அப்போது தி.மு.க. செய்த ஏற்பாடு என பேச்சுக்கள் அப்போது கிளம்பின. பெயரும், சின்னமும் குழப்பத்தை ஏற்படுத்த சுயேட்சை வேட்பாளர் எம்.விஜயகாந்த்துக்கு 7,355 ஓட்டுக்கள் கிடைத்தன.
வாக்காளர்களின் குழப்பம்
தேமுதிகவிற்கு தேர்தல் கமிஷன் அளித்த முரசு சின்னத்தை போலவே சுயேட்சைகளுக்கு ஒதுக்கப்பட்ட கூடைச் சின்னம் இருந்தததால் முதியவர்களும் கிராமப்புற மக்களும் குழம்பி போனார்கள்.
முரசுக்கு வில்லன்
இந்த தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக தேமுதிக அறிவித்துள்ளது. எனவே தங்களுக்கு விழும் ஒவ்வொரு ஓட்டுக்களும் தங்களின் வெற்றியை நிர்ணயிக்கும் என்பதால், கடந்த சட்டசபை தேர்தலில் நடந்தது போல குழப்பம் இப்போதும் ஏற்பட்டுவிடக் கூடாது என உஷாராக இருக்கிறது தேமுதிக.
கூடையை குப்பையில போடுங்க
எனவே இந்த தேர்தலில் சுயேச்சைகள் யாருக்கும் வேறு யாருக்கும் ஒதுக்க கூடாது அல்லது கூடை சின்னத்தை நீக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை அனுக முடிவு எடுத்திருக்கிறார்கள்.
போட்டோ இருக்கே
இது மாதிரியான சின்னங்கள் குழப்பம், பெயர் குழப்பத்தை தவிர்க்கவே வேட்பாளரின் போட்டோவை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொறிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. வேட்பாளரின் முகத்தைப் பார்த்து பிடிக்காமல் ஓட்டை மாற்றிப் போட்டாலும் தேமுதிகவிற்கு வெற்றி வாய்ப்பு பாதிக்குமே?