திப்பு சுல்தான் பிறந்த நாளை கொண்டாட தடை விதிப்பது ஜனநாயக விரோத செயல்: ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: மத நல்லிணக்கத்தை பாதுகாக்க திப்பு சுல்தான் பிறந்த நாளை கொண்டாட போலீசார் தடை விதித்து இருப்பதாக கூறுவது ஜனநாயக விரோத செயல் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக வழியில் முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
கர்நாடகாவில் திப்புசுல்தான் பிறந்தநாள் விழா கொண்டாடம் நடைபெற்ற போது, கலவரம் ஏற்பட்டு, விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில், திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா கொண்டாட அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் அதன் துணை பொதுச் செயலாளர் இஸ்மாயில், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, குடியாத்தம் காவல் நிலைய ஆய்வாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், திப்பு சுல்தான் பிறந்தநாள் கொண்டாட அனுமதி அளித்தால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என தெரிவித்து இருந்தனர். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இந்த வழக்கை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனால், தமிழகத்தில் திப்பு சுல்தான் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
இதனிடையே சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன்,
மத நல்லிணக்கத்தை பாதுகாக்க திப்பு சுல்தான் பிறந்த நாளை கொண்டாட போலீசார் தடை விதித்து இருப்பதாக கூறுவது ஜனநாயக விரோத செயலாகும். இது இந்த அரசாங்கத்தின் மதவெறி தன்மையைத்தான் காட்டுகிறது. தமிழகத்தில் கூட்டம் நடத்த தடை, பாட்டுப்பாட தடை, கருத்து சுதந்திரத்துக்கு தடை என தடைக்கு மேல் தடையை இந்த அரசு ஏற்படுத்தி வருகிறது. திப்புசுல்தான் பிறந்த நாள் கொண்டாட தடை விதித்து இருப்பது ஆர்.எஸ்.எஸ், பாஜக வழியில் முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுவதைக் காட்டுகிறது.
வடகிழக்கு பருவ மழையால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு எந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததால் ஏராளமானோர் உயிர் இழந்துள்ளனர். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்தும் தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. அதனை அலட்சியப்படுத்தியதால் கடலூரில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. வீராணம் ஏரியை தூர்வார ஒதுக்கப்பட்ட ரூ.40 கோடி நிதியில் முறைகேடு நடந்திருக்கிறது.
பருப்பு கொள்முதல் செய்ய தனியாருக்கு மத்திய அரசு அனுமதித்ததால் தனியார் லாபம் அடைந்துள்ளனர். ஒரு கிலோ துவரம் பருப்பு விவசாயிகளிடம் ரூ.40-க்கு வாங்கி மார்க்கெட்டில் ரூ.220-க்கு விற்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ பருப்பில் ரூ.180 கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த பருப்புகள் அதானியின் துறைமுகங்களில் பதுக்கி வைக்கப்பட்டு விலை உயர்ந்த பின்பு கொள்ளை லாபம் அடைந்துள்ளனர் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.