மருத்துவ மாணவர்களுக்கு ‘நீட்’.. பொறியியல் மாணவர்களுக்கு.. வருகிறது அகில இந்திய டெஸ்ட்
மருத்துவ மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு போல பொறியியல் மாணவர்களுக்கு அகில இந்திய தேர்வு விரைவில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது.
சென்னை: மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் 'நீட் என்ற அகில இந்திய தகுதித் தேர்வை எழுத வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதே போன்று பொறியியல் மாணவர்களுக்கான அகில இந்திய தகுதித் தேர்வும் கட்டாயமாக்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு தீட்டி வருகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை 12ம் வகுப்பில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர்க்கப்பட்டு வந்தனர். ஆனால், மத்திய அரசு நெருக்கடி கொடுத்து 'நீட்'தேர்வை இந்த ஆண்டில் இருந்து கட்டாயமாக்கியுள்ளது.
இதற்கு தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 8 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனையடுத்து, பொறியியல் படிப்பில் கை வைத்துள்ளது மத்திய அரசு. பொறியியல் கல்லூரி மாணவர்களின் திறமையை மதிப்பீடு செய்யும் வகையில் இறுதி ஆண்டில் அவர்களுக்கு தகுதி தேர்வு ஒன்றை நடத்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழு புதிய திட்டமிட்டுள்ளது.
பொறியியல் கல்லூரியை முடித்து வெளியேறும் மாணவர்களில் பலர் அவர்கள் படிப்பு சார்ந்த வேலைகளுக்கு தகுதியற்றவர்களாக இருப்பதாக புகார் கூறப்படுவதால், தகுதி தேர்வு ஒன்றை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பான ஆலோசனை அடுத்த வாரம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தகுதி தேர்வுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டால் வரும் கல்வி ஆண்டு முதல் கேட் எனப்படும் பொறியியல் பட்டதாரிகளுக்கான தகுதி தேர்வு நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்படும்.
இதே போன்று, மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வெளியேறும் மாணவர்களுக்கும் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்த போது, அதற்கு இந்தியா முழுவதும் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அது ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.