இந்த வாட்டியாவது வருவார்னு பார்த்தா... ஒருமுறை கூட தேர்தலில் போட்டியிடாமல் 'எஸ்' ஆன வாசன்!
சென்னை: லோக்சபா தேர்தலி்ல போட்டியிடப் போவதில்லை என்று மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய கோஷ்டித் தலைவருமான ஜி.கே.வாசன் அறிவித்து விட்டார்.
இதன் மூலம் இதுவரை தேர்தல் மூலம் மக்களை சந்தித்ததில்லை என்ற சாதனையை அவர் தக்க வைத்துள்ளார்.
அரசியலுக்கு வந்தது முதல் இதுவரை அவர் ஒருமுறை கூட தேர்தலில் நின்றதில்லை. இந்த நிலை வாசனின் தற்போதைய அறிவிப்பால் தொடர்கிறது.
மூப்பனாரின் அரசியல் வாரிசு
மறைந்த ஜி.கே.மூ்ப்பனாரின் மகனான ஜி.கே.வாசன், தனது தந்தையின் மறைவுக்குப் பின்னர் அரசியலுக்கு வந்தார்.
தமாகாவைக் கலைத்து காங்கிரஸுடன் ஐக்கியம்
ஆரம்பத்தில் தனது தந்தை தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை நடத்தி வந்தார். பின்னர் அதை சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸுடன் இணைத்தார். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.
காங்கிரஸின் முக்கிய கோஷ்டித் தலைவர்
காங்கிரஸில் இணைந்த பின்னர் கட்சியில் வாசனின் கொடியே தொடர்ந்து பறந்து வருகிறது. அவரது கோஷ்டிதான் தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய முதன்மையான கோஷ்டியாக இன்றளவும் உள்ளது. அதுவே வாசனின் பெரிய வெற்றிதான்.
மக்களை சந்திக்காத மக்கள் தலைவன்
இதுவரை வாசன் ஒருமுறை கூட மக்களை தேர்தல் மூலம் நேரில் சந்தித்ததே இல்லை. மக்கள் தலைவரின் வாரிசு என்று அவரது ஆதரவாளர்களால் வர்ணிக்கப்பட்டு வருபவர் வாசன்.
எப்பப் பார்த்தாலும் பின் வாசல்தான்
அப்படிப்பட்டவர் இதுவரை மக்களை சந்திக்காமல் பின் வாசல் வழியாகவே நாடாளுமன்றத்திற்குப் போய் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.பி பதவியும் போச்சு போ...
தற்போது வாசன் வகித்து வந்த ராஜ்யசபா எம்.பி பதவியும் முடிந்து போய் விட்டது. தற்போது அவர் எம்.பி. வாசன் இல்லை, வெறும் வாசன்தான்.
இந்த முறையாவது வருவார்னு பார்த்தா
இந்த முறை லோக்சபா் தேர்தலில் வாசன் போட்டியிடப் போவதாக செய்திகள் பரவி வந்தன. அதற்குக் காரணம், வலுவான கூட்டணியை எப்படியாவது காங்கிரஸ் அமைத்து விடும். அதை வைத்து தேர்தலில் ஜெயித்து விடலாம் என்ற நம்பிக்கை வாசனுக்கு இருந்ததே.
ஒரு பயலும் தீண்டலையே நம்ம கட்சியை
ஆனால் காலத்தின் கோலமாக ஒரு கட்சியும், காங்கிரஸை விரும்பவில்லை. அத்தனை பேரும் சேர்ந்து முகத்தில் கையை வைத்து விட்டார்கள். மக்களிடமும் காங்கிரஸ் கட்சிக்கு ரொம்பக் கேவலமான பெயர் வேறு. இதனால் காங்கிரஸ் நிலை மிகப் பரிதாபமாக உள்ளது.
டெபாசிட்டை இழந்துட்டா...
இதனால் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவோர் அத்தனை பேருக்கும் டெபாசிட் கிடைக்குமா என்பதே சந்தேகத்திற்குரியதாக மாறியுள்ளது. இந்தப் பயம்தான் தற்போது வாசனையும் பீடித்திருக்குமோ என்று சந்தேகப்பட வேண்டியுள்ளது.
தென் சென்னை அல்லது தஞ்சாவூர்
முதலில் வாசன், தென் சென்னையில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறின. இது ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக விளங்கிய தொகுதி. அதேபோல தஞ்சாவூரிலும் அவர் போட்டியிடலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால் தான் போட்டியிடப் போவதில்லையே என்று டபாய்த்து விட்டார் வாசன்.
கடைசி வரைக்கும் இப்படியேதானா...
இதன் மூலம் அவர் இதுவரை மக்களை நேரில்தேர்தல் மூலம் சந்திக்காத தலைவர்கள் வரிசையில் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.
தைரியம் வேணும்ண்ணே
ஜி.கே.மூப்பனார் மாதிரியே பேசுவது வாசனின் வழக்கம். அவர் மாதிரியே வாயசைப்பும், வெளியில் விடும் வார்த்தையும் இருக்கும். ஆனால் மூப்பனார் கூட ஒருமுறை தேர்தலில் நின்றார். ஆனால் வாசனோ, இதுவரைக்கும் ஒரு தேர்தலில் கூட நிற்காமல் டபாய்த்து தப்புவது ஏன் என்றுதான் தெரியவில்லை...
தைரியம்மா இருக்கனும்ண்ணே.. அரசியலுக்கு வந்துட்டா...