கட்டாய ஹெல்மெட் சட்டத்தை முறையாக அமல்படுத்தவில்லை... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் "குட்டு"
சென்னை: இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாய ஹெல்மெட் அணியும் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இரு சக்கர வாகனத்தில் பயணிப்போர் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், இந்த உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என மாதம் தோறும் ஆய்வு செய்து வருகிறார். இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அவற்றை ஆய்வு செய்த நீதிபதி கிருபாகரன் இந்த விவகாரத்தில் தமிழக அரசு செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று அதிருப்தி தெரிவித்தார். ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி பிரபல அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்களை வைத்து ஏன் பிரச்சாரம் செய்யக் கூடாது என்றும், விபத்து காட்சிகளை கொண்டே ஏன் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
ஹெல்மெட் அணிவதில் பல்வேறு இடையூறு இருப்பதாக புகார் எழுந்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி குறைகளை களைந்து ஹெல்மெட் தயாரிப்பதற்கான விதிமுறைகள் வகுப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டார்.
இருசக்கரம் வாகனம் வாங்குவோருக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்க வேண்டும் என்று மோட்டார் வாகன சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி இருசக்கர வாகனம் வாங்கும் ஒவ்வொருவருக்கும் தலா 2 ஹெல்மெட்களை வாகன உற்பத்தியாளர்கள் வழங்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என அறிவுறுத்தினார். இதைதொடர்ந்து வழக்கு விசாரணையை அக்டோபர் 30-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.