உள்நோக்கம் இல்லை.. அரசு கல்லூரிகளுக்குத்தான் 'நீட்'டில் விலக்கு கேட்கிறோம்.. விஜயபாஸ்கர் சுளீர்!
நீட் தேர்வில் விலக்கு கோருவதில் உள்நோக்கம் இல்லை, முடிந்த அளவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை : நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரை முடிந்தவரை அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டியின் விவரங்கள் :
நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மத்திய, மாநில அரசுகளின் கையில் இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாகவே சிக்கல் இருக்கிறது. தமிழகம் சார்பில் எந்த அளவிற்கு அழுத்தம் கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு அழுத்தம் கொடுத்துள்ளோம். எந்த மாநிலமும் இது போன்ற அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுக்கவில்லை. ஒரே நாளில் 3 முறை மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளேன்.
தமிழகத்தில் இருக்கும் நடைமுறையில் பின்பற்றும் விஷயங்களை மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி இருக்கிறோம். எல்லா மாநிலங்களும் ஒரு நுழைவுத் தேர்வு வைத்துள்ளது, தமிழகத்தில் மட்டுமே நுழைவுத் தேர்வு இல்லை. +2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடக்கிறது என்ற நடைமுறை வழக்கத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.
சிலர் நீட் விவகாரத்தில் உள்நோக்கம் இருப்பதாகச் சொல்கின்றனர், இதில் எந்த உள்நோக்கமும் இல்லை, தனியார் கல்லூரிகளுக்கோ, டீம்ட் பல்கலைக்கழகங்களுக்கோ விலக்கு கேட்கவில்லை. அரசு கல்லூரிகளுக்கு மட்டுமே நீட் தேர்வில் விலக்கு கோருகிறோம்.
தமிழகத்தில் மட்டும் தான் அதிக மருத்துவ இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் அனைத்தும் தமிழக மாணவர்களுக்கே கிடைக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். கிராமப்புறங்களில் சுகாதார சேவை வழங்க மருத்துவ எனவே பெரும்பாலான இடங்கள் தமிழக மாணவர்களுக்கே கிடைக்க வேண்டும் என்றும் அதை உறுதிப்படுத்தும் கொள்கையிலும் செயல்பட்டு வருகிறோம்.