ஆளுநருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்: ராஜ்பவனில் பலத்த பாதுகாப்பு - 1000 போலீஸார் குவிப்பு
ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெறுவதால் ஆளுநர் மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை : தொடர் போராட்டங்கள் காரணமாக ஆளுநர் மாளிகைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றதில் இருந்து தன்னிச்சையாக மாவட்டங்களில் ஆய்வும் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டமும் நடத்தினார். இது மாநில சுயாட்சியில் தலையிடும் போக்கு என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பினர்.

ஆளுநர் ஆய்வுக்கு செல்லும் அனைத்து இடங்களிலும் அவருக்கு எதிராக போராட்டங்களும், கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இந்நிலையில், தமிழக பல்கலைக்கழகங்களுக்கு தமிழக அரசை கலந்து ஆலோசிக்காமல் வேற்று மாநில பேராசிரியர்களை துணைவேந்தர்களாக நியமித்ததற்கும், காவிரி பிரச்னையில் மத்திய அரசுக்கு எந்த வித அழுத்தமும் தராத ஆளுநரைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன.
அரசியல் கட்சிகள் தொடர்ந்து ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டங்கள் அறிவித்தன. இதனால், பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் வெளியான நிலையில், அதில் ஆளுநர் பெயர் குறிப்பிடப்பட்டு இருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அரசியல் கட்சிகள் சார்பில், ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டமும், பேரணியும் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டங்களின் எதிரொலியாக தொடர் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு காரணமாக இணை ஆணையர் மற்றும் 4 துணை ஆணையர்கள் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications