'கழுதை தேய்ந்து கட்டெறும்பு' ஆகும் தேமுதிகவின் வாக்கு சதவீதம்- பாஜக வாக்கு வங்கி உயர்வு!
சென்னை: தமிழகத்தில் அதிமுக, திமுகவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தை பாஜக பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பாஜக 5.5.% வாக்குகளைப் பெற்றுள்ளது. அதாவது 22 லட்சத்து 21 ஆயிரத்துக்கு 141 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அதேசமயம் பிரதான எதிர்கட்சியாக கருதப்படும் தேமுதிகவின் வாக்கு வங்கி 5.1% மாக சரிவடைந்துள்ளது.
கூட்டணி சேர ஆர்வம்
தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி சேரும் என்ற எதிர்பார்ப்பு வெகுவாக இருந்தது. ஒரு பக்கம் திமுக, இன்னொரு பக்கம் காங்கிரஸ், மறுபக்கம் பாஜக என பல தரப்பில் இருந்தும் தேமுதிகவுடன் சேர ஆர்வம் காட்டினர்.
தேமுதிக வாக்கு வங்கி
காரணம் தேமுதிகவின் வாக்கு வங்கிதான். கடந்த 2001 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டு 8.38 சதவீத ஓட்டுகளைப் பெற்றது. இது, 2009 மக்களவைத் தேர்தலில் 10.1 சதவீதமாக உயர்ந்தது.
31 லட்சம் வாக்குகள் பெற்ற தேமுதிக
அப்போது தமிழகம் முழுவதும் மொத்தம் பதிவான ஓட்டுகள் 3 கோடியே 38 லட்சத்து 83 ஆயிரத்து 49. இதில் தேமுதிக மட்டுமே 30 லட்சத்து 72 ஆயிரத்து 881 ஓட்டுகளை பெற்றது. 35 தொகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பெற்றிருந்தது.
கூடிய செல்வாக்கு
இதனால், தேர்தல் களத்தில் தேமுதிகவின் செல்வாக்கு கூடியது. எல்லா தரப்பிலும் பேச்சு நடத்தி வந்த தேமுதிக, எந்த முடிவையும் அறிவிக்காமல் இழுத்தடித்து வந்தது.
பாஜக கூட்டணியில்
பின்னர் ஒரு வழியாக பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவித்தது. ஆனாலும், தொகுதிப் பங்கீடு, எந்தெந்த தொகுதி என்பதில் அந்தக் கூட்டணியில் நீண்ட காலம் இழுபறி நீடித்து வந்தது. பின்னர் கூட்டணியில் தேமுதிகவுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தமிழகத்தில் பாஜக கூட்டணியில் அதிக இடங்களில் போட்டியிடும் பெரிய கட்சியாக தேமுதிக இருந்தது.
பாமக மோதல் போக்கு
மேலும், தொகுதி ஒதுக்கீட்டில் பாமகவுடன் மோதல் ஏற்பட்டு, அதிலும் ஒரு வழியாக சமரசம் ஏற்பட்டது. கடைசியாக திருவள்ளூர், மத்திய சென்னை, வடசென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருச்சி, கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய 14 தொகுதிகளில் போட்டியிட்டது.
விஜயகாந்த் கணக்கு
பாமக, மதிமுக கட்சிகளின் ஓட்டுகள் மற்றும் பாஜகவின் மோடி அலை எல்லாம் சேர்ந்து 5 முதல் 8 தொகுதிகளில் தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என தேமுதிக கணக்கு போட்டு வைத்திருந்தது. எட்டு லட்சியம்; ஐந்து நிச்சயம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் நம்பிக்கையுடன் கூறிவந்தார்.
படுதோல்வியடைந்த தேமுதிக
ஆனால், தேர்தல் முடிவில் ஒரு தொகுதிகூட அந்தக் கட்சிக்கு கிடைக்காதது தொண்டர்கள் மத்தியில் பெரும் சோர்வையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
குறைந்த வாக்கு சதவிகிதம்
இந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட 14 தொகுதிளில் பெற்றுள்ள வாக்குகளை ஒப்பிடும் போது, தேமுதிகவின் வாக்கு வங்கி சதவீதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
தமிழகம் முழுவதும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரச்சாரம் செய்தனர். அதற்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
பாஜக வாக்குகள் உயர்வு
அதேசமயம் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் 5.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. பதிவான வாக்குகளில் 20 லட்சத்து 79 ஆயிரத்து 392 வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலின் மூலம் தமிழகத்தில் பாஜக புதிய கணக்கை தொடங்கியுள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.