தர்மயுத்தம் தொடங்கிய ஓராண்டு.. ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியலுக்கு எத்தனை மார்க் போடலாம்?
அதிமுகவில் சசிகலாவிற்கு எதிராக எரிமலையாக புறப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் முடிந்த ஓராண்டில் அவரது அரசியலுக்கு எத்தனை மார்க் போடலாம்?
Recommended Video
சென்னை : அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலா வெளிப்படையாக அதிகாரம் செலுத்த நினைத்தார். கட்சியின் பொதுச்செயலாளராக தன்னை அறிவிக்க வைத்ததோடு, தமிழக முதல்வராகவும் ஆக நினைத்தார். இதனை எதிர்த்து எரிமலையாக வெடித்துக் கிளம்பிய ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதி முன்பு தொடங்கிய தர்மயுத்தம் முடியும் ஓராண்டில் அவரது அரசியலுக்கு எத்தனை மார்க் போடலாம்?
ஜெயலலிதா இந்த வார்த்தைக்கு எத்தனை கம்பீரம் என்பதை தனது ஆளுமையின் மூலம் நிரூபித்துக் காட்டியவர். கட்சியிலும், ஆட்சியிலும் தனக்கு மிஞ்சி யாரும் எந்த ஒரு துரும்பைக் கூட கிள்ளி போட்டுவிட முடியாது அந்த அளவிற்கு ராணுவ கட்டுப்பாட்டுடன் செயல்பட்டார். அவர் காலத்தில் வாய் மூடி மவுனிகளாக இருந்த அமைச்சர்களை ஏன் ஜெயலலிதா மறைவிற்குப் பின் பேசும் பேச்சுகள் அவர் ஏன் மற்றவர்களை வாய் திறக்க விடவில்லை என்பதை வெட்டவெளிச்சம் போட்டு காட்டுகிறது.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக தன் கையை மீறிப் போய்விடுமோ என்று அவசர அவசரமாக கட்சிப் பொறுப்புக்கு தன்னை நியமிக்க தனது நெருங்கிய ஆதரவாளர்கள் மூலம் நெருக்கடி தந்தது சசிகலா டீம். இதில் வெற்றியும் பெற்றது, ஆனால் ஆட்சிக்கும் வரலாம் என்று போட்ட திட்டம் தான் அவர்கள் குடும்பத்திற்கே போதாத காலமாகிவிட்டது.
பன்னீர்செல்வமும் பிப்ரவரி 7ம்
பிப்ரவரி 5ல் சசிகலா சட்டமன்றத்தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதாக அதிமுக தலைமை அலுவலக கூட்டத்தில் அறிவித்த கையோடு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் போயஸ் கார்டனில் வைத்து சசிகலா உறவினர்கள் தன்னுடைய சட்டை பிடித்து இழுத்து ராஜினாமாவிற்கு வற்புறுத்தியதாக பின்னர் கூறினார் ஓ.பன்னீர்செல்வம். ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்த பின்னர் அமைதியாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கடந்த ஆண்டில் இதே நாளில் தான் மாலை 9 மணியளவில் ஜெயலலிதா சமாதி முன்பு தியானம் மேற்கொண்டார். அதிமுகவில் அமைதியோடு சிரித்த முகத்தோடும் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த திடீர் தியானம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெ. சமாதி முன்பு வெடித்த பன்னீர்
சுமார் 40 நிமிட தியானத்தற்குப் பிறகு தியானம் கலைத்த ஓ.பன்னீர்செல்வம் தான் நிர்பந்தப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்ததாக கூறினார். முதல்வர் பதவியில் என்னை உட்காரவைத்து விட்டு எனக்குக் கீழ் இருக்கும் அமைச்சரை வைத்து தன்னை முதல்வர் பதவியில் இருந்து விலகச் சொல்வது நியாயமா என்று வெடித்தெழுந்தார்.
சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தம்
தொண்டர்கள் விரும்பும் ஒருவர்தான் கட்சியின் பொதுச்செயலாளராகவும், மக்கள் விரும்பும் ஒருவர்தான் முதல்வராகவும் இருக்கவேண்டும் இதற்காக தனியொருவனாகப் போராடவும் தான் தயார் என்றும் பகிரங்க அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம். ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த அறிவிப்பு தான் தர்மயுத்தத்திற்கு வழிக்கோலிட்டது.
பாஜக சப்போர்ட்டில் ஓ.பிஎஸ்
ஜெயலலிதாவின் ஆன்மாவின் உந்துதலாலேயே இந்த உண்மைகளைச் சொல்வதாகவும் நியாயம் வெல்லும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் முழங்கினார். ஓ.பன்னிர்செல்வத்தின் இந்த தர்மயுத்த போராட்டத்திற்கு முதல் ஆளாக வந்து ஆதரவு தெரிவித்தார் மைத்ரேயன் எம்பி. பாஜகவில் இருந்து அதிமுகவிற்குத் தாவிய இவர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இரவோடு இரவாக வந்து ஆதரவு தெரிவித்தது, இதன் பின்னணியில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் பிளான் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியது.
சசிகலா சொன்ன காரணம்
மைத்ரேயனைத் தொடர்ந்து மதுசூதனன், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பி.எச்.பாண்டியன் உள்ளிட்டோர் அணிதிரண்டனர். ஓ.பன்னீர்செல்வம் பக்கம் ஆதரவு கூடிக்கொண்டே போனது, சசிகலா தரப்புக்கு பிரஷர் ஏற்றிக் கொண்டே இருக்க ஓ.பன்னீர்செல்வத்திற்கு பதிலடியாக போயஸ்கார்டனில் பேட்டி கொடுத்த சசிகலா, சட்டசபை கூட்டத்தின் போது ஓ.பன்னீர்செல்வம் திமுகவினரை பார்த்து சிரித்த போதே எனக்கு சந்தேகம் வந்துவிட்டது என்றார்.
ஓ.பிஎஸ்க்கு சாதகமான சசிகலா எதிர்ப்பு
எனினும் சசிகலா குடும்பத்திற்கு எதிரான அலை அதிமுகவினர் மத்தியில் எழுந்ததால் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு பெருகத் தொடங்கியது. தனது தர்மயுத்தத்தின் முக்கிய கோரிக்கைகளாக சசிகலா குடும்பம் கட்சியை விட்டு வெளியேற வேண்டும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
இரட்டைக்குழல் துப்பாக்கிகள் இணைப்பு
ஆனால் இடையில் நடந்த பல்வேறு அரசியல் சதுரங்களுக்குப் பிறகு சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவிக்கு மட்டும் வேட்டு வைத்தனர் ஆட்சிக்கு வந்த பின்னர் சசிகலாவை கழட்டி விட்ட பழனிசாமி அணியினர். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டதோடு இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இருந்த பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்தனர்.
வெற்றி பெற்றதா தர்மயுத்தம்?
அதிமுகவை சசிகலா குடும்ப சொத்தாக மாறாமல் இருக்க ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தம் வெற்றியைத் தான் பெற்றிருக்க என்றே சொல்ல வேண்டும். ஆனால் இரண்டு அணிகள் இணைந்த போது இருந்த மகிழ்ச்சி ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு நீடிக்கவில்லை, இடையில் அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்று மைத்ரேயன் புகைச்சலைகிளப்ப. ஆனால் அது பற்றி எறியாமல் தணியவைத்து விட்டனர்.
எத்தனை மார்க் போடலாம்?
எனினும் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கிய போது அதிமுகவினர் மத்தியில் இருந்த செல்வாக்கு இப்போதும் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் கட்சியின் தனக்கு முன்னிலை பதவியையும், ஆட்சியில் இரண்டாம் நிலை பதவியையும் பெற்றுக் கொண்டு சுயநலத்தோடு தனது தர்மயுத்தத்தை முடித்துக் கொண்டார் என்ற குற்றச்சாட்டும் பரவலாக இருக்கிறது. தர்மயுத்தம் முடிந்த ஓராண்டில் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் பயணத்திற்கு நீங்கள் போடும் மார்க் எவ்வளவு?