'சின்னம்மா'வுக்கு நன்றி... ஜல்லிக்கட்டுப் பேரவை தலைவரின் போஸ்டரால் கொந்தளிப்பு!
சசிகலாவுக்கு நன்றி தெரிவித்து ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் ஒட்டியிருக்கும் போஸ்டர் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டுக்காக பல லட்சம் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் போராடிய நிலையில் அதிமுகவினரின் 'சின்னம்மா'வுக்கு நன்றி தெரிவித்து ஜல்லிக்கட்டுப் பேரவை தலைவர் பி. ராஜசேகர் ஒட்டியிருக்கும் போஸ்டர் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என அலங்காநல்லூர் வாடிவாசலில் பற்ற வைத்த நெருப்பு தமிழ்நாடெங்கும் பரவியது. தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் பெருந்திரளாக மக்கள் ஒன்று திரண்டு போராடினர்.
ஒரே ஒரு நாள் போராட்டமாக இல்லாமல் பல நாள் போராட்டமாக இது வெடித்தது. பல லட்சம் பேர் சென்னை மெரினாவில் அமைதிவழி அறப்போராட்டத்தை நடத்தினர்.
இப்போராட்டத்தால் அதிர்ந்து போன சக்திகள் போலீஸை ஏவி வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது. அமைதிவழி அறப்போருக்கு அரணாக நின்ற மீனவ மக்கள் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தியது.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டுப் பேரவை தலைவர் பி. ராஜசேகர் ஒரு போஸ்டரை ஒட்டியுள்ளார். அதில், ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் இயற்ற காரணமாக இருந்த அதிமுக பொதுச்செயலர் சின்னம்மா மற்றும் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
பல லட்சம் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் தங்களை அர்ப்பணித்து போராடி ரத்தம் சிந்தி பெற்ற உரிமை இது. ஆனால் இந்த புரட்சியாளர்கள் மீது போலீஸ் மூலம் வன்முறையை ஏவிவிட்டவர்களாக குற்றம்சாட்டப்படுகிற கும்பலுக்கு ஜல்லிக்கட்டு பேரவை தலைவரே நன்றி சொல்வதை எப்படி சகிக்க முடியும்? என கொந்தளிக்கிறது இளைஞர் படை.