சென்னையில் போலீஸ் வேன் மோதி 2 மாணவர்கள் பலி... ஜெயலலிதா இரங்கல்
சென்னை: சென்னையில் 2 பள்ளி மாணவர்கள் போலீஸ் வேன் மீது பலியான சம்பவம் குறித்து முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரண உதவியையும் முதல்வர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை, அயனாவரம், பனந்தோப்பு ரயில்வே காலனி, 10-வது தெரு அருகே 5.6.2016 அன்று காவல் துறை வாகனம் மோதியதில், அயனாவரத்தைச் சேர்ந்த விக்டர் என்பவரின் மகன் ராம்குமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயும்; ஓட்டேரியைச் சேர்ந்த டேவிட் என்பவரின் மகன் சாலமன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த ராம்குமார் மற்றும் சாலமன் ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
போலீஸ் தடியடி - கருணாநிதி கண்டனம்
முன்னதாக இந்த விபத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். சாலை மறியல் மேற்கொண்டனர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியதில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. இது மேலும் பரபரப்பைக் கூட்டியது. திமுக தலைவர் கருணாநிதி இந்த தடியடிக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய போலீஸ் டிரைவர் ஏழுமலை என்பவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்ததால் பரபரப்பு மேலும் அதிகரித்தது. இந்தப் பின்னணியில் முதல்வரின் உதவி அறிவிப்பு வெளியாகியுள்ளது.