அமைச்சர் கே.வி.ராமலிங்கம் உள்பட 4 மாவட்ட அதிமுக செயலாளர்கள் நீக்கம்
முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலுள்ள அமைச்சர் கே.வி.ராமலிங்கம் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார். புதிதாக ஒருவர் நியமிக்கப்படும் வரை, மாவட்டச் செயலாளர் பொறுப்புகளை ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் கூடுதலாக கவனித்துக் கொள்வார்.
நீலகிரி மாவட்டச் செயலாளரும், எம்.பி.யுமான கே.ஆர்.அர்ஜூனன், அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். புதிய செயலாளராக நீலகிரி மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளரான பால நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டச் செயலாளரான ஜி.முனியசாமி அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார். புதிதாக ஒருவர் நியமிக்கப்படும் வரை, மாவட்டச் செயலாளர் பொறுப்புகளை எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் கூடுதலாகக் கவனித்துக் கொள்வார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகச் செயலாளரான என்.பாலசந்தர் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார். புதிதாக ஒருவர் நியமிக்கப்படும் வரை, மவாட்டச் செயலாளர் பொறுப்புகளை திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான முக்கூர் என்.சுப்பிரமணியன் கூடுதலாகக் கவனித்துக் கொள்வார்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ராமலிங்கம் அமைச்சர் பதவிக்கும் ஆப்பு?
ஈரோடு மாநகர் மாவட்ட செயலராகவும், பொதுப்பணித் துறை அமைச்சராகவும் இருந்தவர் கே.வி.ராமலிங்கம். இம் மாவட்டத்தில், செல்வாக்குடன் திகழ்ந்த செங்கோட்டையன் ஓரம்கட்டப்பட்டதால் ராமலிங்கத்தின் கை ஓங்கியது.
அதுவும் மிக முக்கியமான பொதுப்பணித் துறை அமைச்சர் பொறுப்பும் ராமலிங்கத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால் மணல் குவாரிகள் ஒதுக்கீடு, மணல் விற்பனையில் நடந்த முறைகேடுகளால் ராமலிங்கத்தின் அமைச்சர் பதவி ஆட்டம் கண்டது.
இதனால் பொதுப்பணித்துறை அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு நிதியமைச்சர், ஓ.பன்னீர்செல்வத்திடம் கூடுதல் பொறுப்பாக கொடுக்கப்பட்டது. இந்நிலையில் நில அபகரிப்பு புகாரில் சில நாட்களுக்கு முன்பு ராமலிங்கம் சிக்கப் போய் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் முதல் கட்டமாக அவரது மாவட்ட செயலர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவரது அமைச்சர் பதவியும் பறிபோகும் என்றும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.