எக்ஸிட் போல் முடிவுகள் உண்மையானால் ஜெயலலிதாவின் அரசியல் திட்டங்கள் தவிடுபொடி!
சென்னை: எக்ஸிட் போல் கணிப்புப்படி பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மை பெறும்பட்சத்தில் அதிமுகவின் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கனவு, ஜெயலலிதாவை பிரதமராக்கும் முயற்சி எல்லாம் கானல் நீராக போய்விடும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
நாற்பதும் நமதே..
நாற்பதும் நமதே என்ற கோஷத்துடன் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்த ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுகவினரின் சுருதி போகப்போக குறைந்தது. இதனால் ஜெயலலிதாவை பிரதமர் பதவிக்கு முன்னிருத்தி செய்த பிரச்சாரத்தை அதிமுக நிர்வாகிகள் அடக்கி வாசிக்க ஆரம்பித்தனர். அதே நேரம் மத்திய அரசியல் அதிமுக அங்கம் வகிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு நிறையவே இருந்தது.
தமிழகத்திற்கு நன்மைகள் கொட்டும்..
மத்திய அரசில் அதிமுக அங்கம் வகித்தால், தமிழ்நாட்டுக்கு பல நன்மைகளை பெற்றுத்தருவேன் என்று ஜெயலலிதா பிரச்சாரம் செய்து வந்தார். மீனவர் பிரச்சனை, இலங்கை தமிழர் பிரச்னை போன்றவற்றில் தமிழகத்துக்கு நியாயம் பெற்றுத்தர முடியும் என்று ஜெயலலிதா தனது எதிர்கால திட்டங்களை பட்டியலிட்டார்.
பாஜகவுக்கு தனிபெரும்பான்மை
இப்போது எக்சிட் போல் முடிவுகள் வந்துள்ளன. அனைத்து தொலைக்காட்சிகளுமே பாஜக கூட்டணி 250 இடங்களுக்கு மேல் வெல்லும் என்றே கூறுகின்றன. சில ஊடகங்கள் பாஜக கூட்டணி 275 தொகுதிகளுக்கும் மேல் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கப் போவதாக ஆரூடம் கூறுகின்றன. ஒருவேளை வெற்றிக்கு தேவையான சீட்டுகளைவிட 10 அல்லது 20 குறைவாக இருந்தாலும் பாஜக ஜெயலலிதாவின் ஆதரவை கோருமா என்பது சந்தேகம்தான்.
பட்டபாடு போதுமப்பா சாமி..
வாஜ்பாய் தலைமையிலான ஆட்சிக்கு அதிமுக ஆதரவு அளித்துவிட்டு அதன்பிறகு தினமும் அவருக்கு நெருக்கடி கொடுத்த அதிருப்தி இன்னும் பாஜக தலைவர்களிடம் உள்ளதாக கூறப்படுகிறது. மோடியும் அதுபோன்ற ஒரு நெருக்கடியை விரும்பமாட்டார் என்றே கூறுகிறார்கள். எனவே ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அல்லது, ஒடிசாவின் பிஜு ஜனதாதளம் கட்சியின் தயவை பெற்று ஆட்சியமைக்கவே பாஜக விரும்பும் என்று கூறப்படுகிறது. ஆர்எஸ்எஸ் தலையிட்டால் மட்டுமே அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது.
தூண்டிவிட்ட மம்தா
காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளின் கூட்டணிகளும் ஆட்சியமைக்க தேவையான சீட்டுகளை பெறமுடியாமல் இருந்தால், மூன்றாவது அணி அமைத்து அதன் மூலம் பிரதமராக ஜெயலலிதாவுக்கு வாய்ப்பு இருந்தது. எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகளும், அதிமுகவுக்கு சுமார் 25 முதல் 30 சீட்டுகள் கிடைக்கும் என்று கூறுகின்றன.
பிராந்திய கட்சிகளிலேயே அதிமுகதான் அதிக சீட்டுகளை பெறப்போவதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதற்கடுத்தாற்போல மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போதே மூன்றாவது அணிக்கு அச்சாரம் போட்ட மம்தா பானர்ஜி, ஜெயலலிதா பிரதமராக ஆதரவு அளிப்பேன் என்றார்.
எங்கே அந்த 3வது அணி?
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்போ மூன்றாவது அணிக்கு வேலையில்லை என்பதைப்போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. எனவே ஜெயலலிதா பிரதமராகும் வாய்ப்பு மிகவும் மங்கியுள்ளது. ஆட்சியில் பங்கெடுத்து நல்ல துறைகளை அதிமுகவுக்கு பெற்றுக்கொள்ளலாம் என்றால் அதுவும் நடக்காது போல உள்ளது. ஆக மொத்தத்தில் தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் அரசு அமைந்தால், அதனால் தமிழகத்துக்கென்று தனிப்பட்ட நன்மைகளை எதிர்பார்க்க முடியாது.
ஏனெனில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இம்முறை தமிழக கட்சிகள் ஆட்சியில் செல்வாக்கு செலுத்த முடியாது என்பதே எக்ஸிட் போல் சொல்லும் பாடம்.