"மேட்" பேரவையிலிருந்து தீபா கணவர் "மேடி" திடீர் விலகல்.. தனிக்கட்சி தொடங்கப் போறாராம்!
எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையில் இருந்து விலகிவிட்டதாக தீபா கணவர் மாதவன் அறிவித்துள்ளார்.
சென்னை: எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் இருந்து ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கணவர் மாதவன் திடீரென விலகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவருடைய அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் பலர் விருப்பம் தெரிவித்தனர். அ.தி.மு.க.வினரின் வேண்டுகோளை ஏற்று, ஜெயலலிதா பிறந்தநாளில் "எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவை" என்று தீபா தொடங்கினார்
பேரவை தொடங்கியது முதல் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தது. இந்நிலையில் தீபா கணவர் மாதவன் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாதவன், கூடிய விரைவில் தனிக்கட்சி தொடங்கப்படும். தீபா பேரவையில் தீயசக்தியின் தலையீடு உள்ளது. தகுந்த நேரத்தில் அவர்கள் யார் என்பதை மக்கள் மத்தியில் அறிவிப்பேன்.
தீபா நடத்துவது பேரவை. நான் தொடங்கப்போவது கட்சி. ஓரிரு நாட்களில் கட்சியின் பெயர் வெளியிடப்படும். ஆர்.கே. நகரில் போட்டியிடுவது குறித்து தொண்டர்களை கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார்.