ஜெருசலேமுக்கு பதிலடியாக கொடைக்கானலில் யூதர்கள் மீது தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் சதி?
ஜெருசலேம் விவகாரத்தில் பதிலடி கொடுக்கும் வகையில் கொடைக்கானலுக்கு வருகை தரும் யூதர்கள் மீது தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திண்டுக்கல்: இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அறிவித்ததற்கு பதிலடியாக தமிழகத்தின் கொடைக்கானலுக்கு ஆண்டு தோறும் வரும் யூதர்களை இலக்கு வைத்து ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா அங்கீகாரம் அளித்துள்ளது. ஆனால் சர்வதேச நாடுகள் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஐஎஸ் மிரட்டல்
மெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அரபு நாடுகள் கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும் தயாராகி வருகின்றன. இதனிடையே ஜெருசலேம் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி தருவோம் என ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
கொடைக்கானலுக்கு மிரட்டல்
இதனையடுத்து யூதர்கள் சுற்றுலா செல்லும் சர்வதேச நகரங்களில் பலத்த பாதுகாபு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கொடைக்கானலுக்கு அதிக அளவில் யூத சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
வாகன சோதனைகள்
இவர்களை இலக்கு வைத்து ஐஎஸ் தீவிரவாதிகள் சதி நடத்தலாம் என்கிற சந்தேகத்தில் கொடைக்கானலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொடைக்கானலில் தீவிரமான வாகன சோதனைகளும் நடத்தபட்டு வருகின்றன.
சிரமத்தில் சுற்றுலா பயணிகள்
போலீசாரின் தீவிர கெடுபிடியால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். அண்மையில் கேரளாவில் பிடிபட்ட ஐஎஸ் ஆதரவாளர்களும் கூட கொடைக்கானலில் முகாமிடும் யூதர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.