ராம்குமார் உடலைப் பார்க்க அனுமதி மறுப்பது ஏன்? ஜான்பாண்டியன் கேள்வி
சென்னை: புழல் சிறையில் மர்மமான முறையில் இறந்த ராம்குமாரின் உடலை பார்க்க தமிழக முன்னேற்ற கழகத் தலைவர் ஜான்பாண்டியன் இன்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தார். பிணவறையில் உள்ள ராம்குமாரை பார்க்க ஜான்பாண்டியனுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால், காவல்துறையினருக்கும், ஜான்பாண்டியனுக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
சுவாதி கொலையில் கைது செய்யப்பட்ட ராம்குமார், நேற்று மின்வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் செய்தி வெளியிட்டது. அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையைச் சுற்றி பதற்றமான நிலையே நிலவுகிறது.
ராம்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அரசியல் கட்சித்தலைவர்கள் கூறி வருகின்றனர். ராம்குமாரின் உடலை பிரேதபரிசோதனை செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் ராம்குமாரின் உடலை பார்க்க தமிழக முன்னேற்ற கழகத் தலைவர் ஜான்பாண்டியன் இன்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தார். பிணவறையில் உள்ள ராம்குமாரை பார்க்க ஜான்பாண்டியனுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால், காவல்துறையினருக்கும், ஜான்பாண்டியனுக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
செய்தியாளர்களிடம் பேசிய ஜான்பாண்டியன், ராம்குமாரின் மரணத்தில் மர்மம் நீடிப்பதாக கூறியுள்ளார். நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி உயிரிழந்துள்ளார். இதற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும். ராம்குமார் எனது சொந்த மாவட்டத்துக்காரர். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் எனது சொந்தக்காரர் அல்ல.
ராம்குமாரின் உடலை பார்க்க அனுமதி மறுப்பது ஏன் என்று கேட்ட ஜான்பாண்டியன், இதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. சிறைகாவலர்கள் யார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்றும் ஜான் பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.