கொள்ளையர்களால் உயிரிழந்த தலைமைக் காவலர் முனுசாமி மகளுக்கு கிடைத்தது எம்பிபிஎஸ் சீட்!
கிருஷ்ணகிரி: ஓசூரில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த தலைமைக் காவலர் முனுசாமியின் மகள் ரக்ஷனாவுக்கு, அவரது தந்தையின் விருப்பம்படியே எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த 15-ம் தேதி ஆசிரியையிடம் நகை பறித்த கொள்ளைக் கும்பலை, குற்றப் பிரிவு உதவி ஆய்வாளர் நாகராஜ், தலைமைக் காவலர்கள் முனுசாமி, தனபால் ஆகியோர் பிடிக்கச் சென்றனர். அப்போது, போலீஸாரை கொள்ளையர்கள் கத்தியால் தாக்கினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் தலைமைக் காவலர் முனுசாமி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தலைமைக் காவலர் முனுசாமியின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், முனுசாமியின் மகள் ரக்ஷனாவின் உயர் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
முனுசாமி தனது மகள் ரக்ஷனாவை மருத்துவராக்க வேண்டும் என்றே விருப்பட்டார். தற்போது அவரது விருப்பத்தின் படியே ரக்ஷனாவுக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளது. பிளஸ் 2 தேர்வில் 1182 மதிப்பெண்கள் குவித்திருந்த ரக்ஷனா, மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்திருந்தார். அவர் 198.25 கட்-ஆப் மதிப்பெண்ணுடன் தரவரிசைப் பட்டியலில் 565-வது இடத்தை பிடித்திருந்தார். சென்னையில் நேற்று நடந்த மருத்துவப் படிப்புக்கான பொது கலந்தாய்வில் கலந்து கொண்ட ரக்ஷனாவுக்கு மதுரை அரசு மருத்துக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் கிடைத்தது.
இது குறித்து ரக்ஷனா கூறுகையில், சிறந்த மருத்துவராகி எனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவேன் என்று கூறினார்.
இது தொடர்பாக ரக்ஷனாவின் தயார் கூறுகையில், ரக்ஷனாவுக்கு சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். சென்னையில் நண்பர்களும், உறவினர்களும் உள்ளனர். எனவே சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இடம் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications