தினகரனுக்காக நாலு ஓட்டு கிடைக்குமா? கொங்கு எம்.எல்.ஏக்களுக்கு போன்போட்டு டோஸ் விடும் மக்கள்
எடப்பாடி ஆட்சிக்கு எதிராக தினகரனுடன் கை கோர்க்கும் கொங்கு எம்.எல்.ஏக்களுக்கு பொதுமக்கள் போன்போட்டு மிரட்டல் விடுத்து வருவது பரபரப்பை கிளப்பியுள்ளது.
சென்னை: அண்ணா தி.மு.கவில் நாள்தோறும் நடக்கும் காட்சிகளால் கலவரத்தில் ஆழ்ந்துள்ளனர் அமைச்சர்கள். தினகரனை சந்திக்கும் எம்.எல்.ஏக்களின் செல்போன் எண்ணை பரவலாக உலவவிட்டுள்ளனர். தினகரன் பேரைச் சொல்லி வந்தால் நாலு ஓட்டாவது உனக்குக் கிடைக்குமா?' என எம்.எல்.ஏக்களைக் கலாய்க்கின்றனர் தொகுதிவாசிகள்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற நாளில் இருந்தே, எடப்பாடி பழனிசாமி அரசை அசைத்துப் பார்க்கும் வேலையில் எம்.எல்.ஏக்கள் இறங்கினர். டி.டி.வி.தினகரன் இருந்தவரையில் அமைதியாக இருந்தவர்கள், அவரும் சிறைக்குப் போன பிறகு நேரடியாகவே அரசை மிரட்டத் தொடங்கினர்.
பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் போட்டு, அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என முழங்க, அமைச்சர் செங்கோட்டையன் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினார். இதன்பிறகு, போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரோடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மோதினார்.
தோப்பு கோஷ்டி
ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட இடத்தில்தான் மருத்துவக் கல்லூரி அமைய வேண்டும் என கரூர் மாவட்டத்தை முன்னிறுத்தி சண்டையிடத் தொடங்கினர். இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜியின் கோரிக்கை ஏற்கப்படாததால், முன்னாள் அமைச்சர்கள் தோப்பு வெங்கடாச்சலம், பழனியப்பன் உள்ளிட்டவர்கள் தனி அணியாகக் கிளம்பினர்.
தினகரன் ரிட்டர்ன்
இதுதவிர, இன்பதுரை உள்பட வேறு சில எம்.எல்.ஏக்களும் தனி ஆவர்த்தனத்தை ஆரம்பித்தனர். இந்நிலையில், லஞ்சம் கொடுத்த வழக்கில் 40 நாள் சிறை தண்டனையை முடித்துக் கொண்டு வெளியே வந்தார் தினகரன். தங்கள் குமுறல்களை அவரிடம் கொட்டத் தொடங்கினர் எம்.எல்.ஏக்கள்.
31 எம்.எல்.ஏக்கள்
இதுவரையில் 31 எம்.எல்.ஏக்கள் தினகரன் தலைமையை ஆதரித்துள்ளனர். எம்.எல்.ஏக்கள் பலர் நேரில் சென்று தினகரனை சந்திக்கக் காரணமே, வேறு எதாவது ஆதாயம் கிடைக்கும் என்ற காரணம்தான். இதனால் தொகுதிக்குள் ஏற்படும் விளைவுகளை இப்போதுதான் அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.
மக்கள் கோபம்
சசிகலா தலைமைக்கு எதிராக பன்னீர்செல்வம் கிளம்பிய நேரத்தில், 11 எம்.எல்.ஏக்கள் அவரை ஆதரித்தனர். மற்ற எம்.எல்.ஏக்களுக்குத் தொகுதி மக்களே போன் செய்து, ஓ.பி.எஸ் அணிக்குப் போங்கள். அம்மாவைக் கொன்ற கொலைகாரக் கூட்டத்தோடு சேராதீர்கள்' என வறுத்தெடுத்தனர். இதற்குப் பயந்தே மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ சின்ராஜ், பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ உள்ளிட்டவர்கள் ஓ.பி.எஸ் பக்கம் திரும்பினர்.
கதறும் கொங்கு எம்.எல்.ஏக்கள்
தற்போது இதேபோன்று டார்ச்சரை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர் கொங்கு மண்டல எம்.எல்.ஏக்கள். கடந்த ஓரிரு நாட்களாக அந்த எம்.எல்.ஏக்களுக்குப் போன் போடும் தொகுதிவாசிகள், தினகரனை நம்பி எதற்காக போகிறீர்கள்? தேர்தலில் அவர் பெயரைச் சொல்லி ஓட்டுக் கேட்டு வர முடியுமா? வந்தாலும் நாலு ஓட்டு உங்களுக்குக் கிடைக்குமா? நம்ம சமூகத்தைச் சேர்ந்தவர் முதலமைச்சராக இருக்கிறார். அவருக்கு எதிராக ஆதாயம் தேட, இப்படித்தான் குரூப்பா கிளம்பிப் போவீங்களா? இனியொருமுறை தினகரனை சந்திக்கப் போனால், ஓட்டுக் கேட்டு தொகுதிக்குள்ளேயே வர முடியாது. எடப்பாடி சொல்றதக் கேட்டு நடங்க. ஆட்சிக்கு எதாவது பிரச்னை வந்தால், நடக்கறதே வேற' என எச்சரிக்கின்றனர்.
அமைச்சர்கள் சதி?
செந்தில்பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம், பழனியப்பன் உள்ளிட்டவர்களுக்கும் இப்படிப்பட்ட போன்கால்கள் வருவதாக, உதவியாளர்கள் புலம்புகின்றனர். போன்கால்களுக்குப் பதில் சொல்ல முடிவதில்லை. கொங்கு அமைச்சர்களே இதுபோன்ற காரியத்தில் இறங்குவதாகத்தான் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது என்கிறார் கொங்கு மண்டல எம்.எல்.ஏ ஒருவரின் உதவியாளர்.