ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை.. குஷ்பு வருத்தம்
சென்னை: ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டிகள் விளையாட்டு என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியது அவரது சொந்தக்கருத்து என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதியளித்ததை கண்டித்திருந்த ஜெய்ராம் ரமேஷ், ஜல்லிக்கட்டில் கருப்பு பணம் புழங்குவதாகவும், அது காட்டுமிராண்டிகள் விளையாட்டு என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு வழங்கிய அனுமதிக்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது. இதுகுறித்து குஷ்பு ஒரு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், "ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது எனக்கு தனிப்பட்ட முறையில் வருத்தமாகத்தான் உள்ளது. ஜெய்ராம் ரமேஷ் தனது பேட்டியின்போதே, அது தனது சொந்த கருத்து என கூறிவிட்டார். அதற்கு என்னிடம் பதில் கேட்டீர்கள் என்றால் சொல்லவே முடியாது" என்றார்.
தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில், மத்திய அரசு அனைத்து சட்ட நுணுக்கங்களையும் ஆராய்ந்து, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.