லாரி ஓட்டுனர்களிடம் போலீசார் தொடர் அத்து மீறல்... 1,000 வாகனங்களுடன் எஸ்.பி அலுவலகம் நாளை முற்றுகை
சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில் போலீசாரின் தொடர் அத்துமீறல்களைக் கண்டித்து 1,000 வாகனங்களுடன் எஸ்.பி. அலுவலகத்தை நாளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக லாரி, டிராக்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
சிவகாசி, திருத்தங்கல் லாரி, டிராக்டர் உரிமையாளர்கள் சங்க கூட்டம் இன்று சிவகாசியில் நடைபெற்றது. கூட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட லாரி, டிராக்டர் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சங்க செயலாளர் தெய்வம் கூறும்போது, விருதுநகரில் லாரி, டிராக்டர் தொழில் முற்றிலும் முடங்கி போய் உள்ளதுசிவகாசி, திருத்தங்கல் பகுதியில் வேலை ஏதும் இன்றி லாரி, டிராக்டர் தொழில் நஷ்டத்தில் உள்ளது.
இந்நிலையில் இத்தொழிலை முற்றிலும் அழிக்கும் வகையில் விருதுநகர் மாவட்ட காவல்துறை செயல்பட்டு வருகிறது. இதனால், இத்தொழிலை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. டிரைவர்கள் மற்றும் லோடுமேன்களை போலீசார் கடுமையாக தாக்கி வருகின்றனர். ஒரு இடத்திலிருந்து மீதம் உள்ள மணல் மற்றும் கட்டுமான பொருட்களை மறு இடத்திற்கு கொண்டு செல்லும் போது போலீசார் மறித்து டிராக்டர்களை பறிமுதல் செய்து டிராக்டர் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
எவ்வித காரணமும் இன்றி போலீசார் தாக்கியதில் 2 டிரைவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் தாக்கியதை கண்டித்து விருதுநகர் எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நாளை நடைபெறுகிறது. இதில் 500 டிராக்டர்கள், 500 லாரிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், லோடுமேன்கள் கலந்து கொள்வர்கள். தமிழக அரசு இந்தப் பிரச்சனையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்களது அடுத்தகட்ட போராட்டம் கடுமையாக இருக்கும் என்று தெரிவித்தார்.