லோக்சபா தேர்தல்: தமிழகத்தில் 367 மனுக்கள் நிராகரிப்பு- 894 வேட்பு மனுக்கள் ஏற்பு!!
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்களில் 367 நிராகரிக்கப்பட்டு 894 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1, 261 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் பல்வேறு காரணங்களுக்காக 367 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 894 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தலில் தேமுதிக வேட்பாளர் வேட்பு மனு குறித்து ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஞாநி சங்கரன் ஆட்சேபனை தெரிவித்தால் அதன் மீதான பரிசீலனை இன்று காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் லோக்சபா தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் மணிரத்னத்தின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சிதம்பரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மணிரத்னம் 4 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார். அதில் 10 பேர் முன்மொழிவதற்கு பதிலாக ஒருவர் மட்டுமே முன்மொழிந்ததால் அவரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
நீலகிரி தொகுதிக்கான பாரதிய ஜனதா வேட்பாளர் குருமூர்த்தியின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. மாற்று வேட்பாளர் அன்பரசுவின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்பதற்கான கடிதத்தை தாமதமாக அளித்ததால் இவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
புதுச்சேரியில் அரசியல் கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள் உட்பட 8 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற்றுக்கொள்ள நாளை கடைசி நாளாகும்.