ரூ570 கோடி விவகாரம்: திமுக தொடர்ந்த வழக்கில் சிபிஐ பதிலளிக்க ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: சட்டசபை தேர்தலின் போது பிடிபட்ட ரூ570 கோடி விவகாரம் குறித்து திமுக தொடர்ந்த வழக்கில் சிபிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சட்டசபை தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்ட ஏராளமான பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வந்தனர். அப்போது திருப்பூர் செங்கபள்ளி அருகே 3 கண்டெய்னர்களில் ரூ570 கோடி ரூபாய் ரொக்கம் பிடிபட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
முதலில் இந்த பணம் வங்கிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது எனக் கூறப்பட்டது. ஆனால் பணம் தங்களுடையதுதான் என எஸ்.பி.ஐ வங்கி உரிமை கோருவதற்கே 18 மணிநேரம் ஆனது. ஆனாலும் அவர்கள் தந்த ஆவணங்கள் தேர்தல் அதிகாரிகளை திருப்திபடுத்தவில்லை.
இதனிடையே ரூ570 கோடி பணம் குறித்து பல்வேறு தகவல்கள் யூகங்களாக கூறப்பட்டன. திமுக, மதிமுக, காங்கிரஸ் தலைவர்கள், இப்பணம் நீலகிரியில் இருந்து ஆந்திராவுக்கு கொண்டு செல்லப்பட்டது என கூறி வந்தனர். இது குறித்து சிபிஐ விசாரணை கோரி பிரதமர் மோடி, தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி உள்ளிட்டோருக்கு திமுக எம்பி டி.கே.எஸ். இளங்கோவன் கடிதம் அனுப்பினார்.
அத்துடன் சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும் டி.கே.எஸ். இளங்கோவன் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு சிபிஐக்கு இன்று நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.