ஒரிஜினல் நகைகளை எடுத்து விட்டு போலி நகைகளை வைத்து மோசடி - வங்கி மேலாளர் உட்பட 3 பேர் கைது
கோவை: கோவையில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்த தனியார் வங்கி மேலாளர் உள்பட மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திலுள்ள உதகை சாலையில் கேரள மாநிலம், கொச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அக்ரோ இண்டஸ் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது.
இங்கு தங்க நகைகளின் பேரில் விவசாயக் கடன் உள்பட பல்வேறு கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இங்கு மேலாளராக பணியாற்றி வந்த தமிழ்ச்செல்வன் வங்கியில் பொதுமக்களால் அடமானம் வைக்கப்பட்ட தங்க நகைகளுக்கு பதிலாக போலி நகைகளை வைத்து விட்டு அசல் நகைகளை எடுத்து மீண்டும் தனது வங்கியிலேயே வேறு பெயரில் அடமானம் வைத்து முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவலின் பேரில் வங்கியின் உயரதிகாரிகள் மேட்டுப்பாளையம் கிளையில் சோதனை மேற்கொண்டனர். இதில் அசல் நகைகளுக்கு பதிலாக போலி நகைகளை அடமானம் வைத்து ரூபாய் 12.25 லட்சம் வரை மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மோசடி குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் கிளை மேலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த சிவக்குமார், வீரசுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.