ராம. ராமனாதனின் திருமண சபதம் இப்படி நிறைவேறாத கனவா போச்சே!
கும்பகோணம்: அம்மா முதல்வராக இருக்கும் போது நான் எம்.எல்.ஏவாக வெற்றி பெறவேண்டும் அப்போதுதான் திருமணம் செய்துகொள்வோன் என்று சபதமே போட்டிருந்தார் கும்பகோணத்தின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்ட ராம. ராமநாதன்.
1991ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் கும்பகோணம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராம.ராமநாதனுக்கு கடந்த 4 முறை நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்து அவர் தோல்வியையே தழுவினார். இதனால் திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார் ராம. ராமநாதன்.
இம்முறை வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தற்போது மாற்றப்பட்டுள்ளார். எனவே இந்த முறையும் ராமநாதனுக்கு அதிருஷ்டம் துணை புரியவில்லை.
சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக ஜெயிக்க வேண்டும் என்று ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காகவே அதிமுகவின் 227 வேட்பாளர்களுடன் 7 கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுமாறு கூறியுள்ளார்.
கும்பகோணம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த முன்னாள் எம்.எல்.ஏ., ராம.ராமநாதனுக்கு தற்போது வயது 52. கடந்த 1991ஆம் ஆண்டில் கும்பகோணம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராமநாதனுக்கு மீண்டும் 1996ம் ஜெயலலிதா வாய்ப்பு அளித்தார்.
அப்போது, ''நான் வெற்றி பெற்று அம்மா ஆட்சியில் அமர்ந்தால் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினார். ஆனால் அதிமுக படுதோல்வியடைந்தது.
2001ம் ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியை கைப்பற்றியது. ஆனால், திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி. மணியை எதிர்த்து போட்டியிட்ட ராம. ராமநாதன் தோல்வி அடைந்தார்.
மீண்டும் 2006ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தபோது இவருக்கு கட்சித் தலைமை வாய்ப்பு கொடுத்தது, அப்போது, ''அம்மா வெற்றி பெற்று, நானும் வெற்றி பெற்றால் திருமணம் செய்து கொள்வேன் என்று சபதம் செய்தார். அப்போதும் இரண்டும் நடக்கவில்லை.
இதேபோல் கடந்த 2011ஆம் ஆண்டும் வாய்ப்பு வழங்கியபோது, வெற்றி பெற்றால் திருமணம் செய்து கொள்வேன் என்றார். கட்சி ஆட்சியை கைப்பற்றியது. ஆனால், தற்போதைய திமுக எம்.எல்.ஏ.அன்பழகனிடம் ராமநாதன் தோல்வி அடைந்தார்.
இம்முறையும் இவருக்கு அதிமுக தலைமை வாய்ப்பு வழங்கியது. இந்த தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் அன்பழகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றுக் காலை அதிமுக தலைமை ராமநாதனை மாற்றி கும்பகோணம் நகராட்சி தலைவர் ரத்னா சேகரை அறிவித்தது. இதனால் ராமாநாதன் மிகவும் மன வேதனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு காரணம் தொடர் தோல்வியை சந்தித்த ராம. ராமநாதனுக்கு மீண்டும் வாய்பளிக்கப்பட்டது ஒருபுறம் இருக்க, 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கும்பகோணம் தொகுதி வேட்பாளரை மாற்றினாராம் ஜெயலலிதா.
ராம.ராமநாதனுக்கு பதிலாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ரத்னா சேகர், கும்பகோணம் மகாமகம் திருவிழாவை வெற்றிகரமாக நடத்திக் காட்டியர். இவர் ரதிமீனா டிராவல்ஸ் உரிமையாளரும், அதிமுக பிரமுகர் சேகரின் மனைவியுமாவார்.
ஜெயலலிதாவின் மீது கொண்ட பற்று காரணமாக தனது பெயரையே ஜெ. ராமநாதன் என்று கெஜட்டில் மாற்றியவர் இந்த ராம.ராமநாதன். அப்போது ஜெயலலிதா கூப்பிட்டு அறிவுரை கூறவே தனது பெயரை மீண்டும் மாற்றினார். தற்போது தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காத காரணத்தால் ராமநாதனின் திருமண கனவும் பலிக்காமல் போனது.