கோவையில் முகமூடி கொள்ளையர் அட்டகாசம்.. டிராவல்ஸ் அதிபர் வீட்டில் 10 லட்சம் கொள்ளை
கோவை: கோவையில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து டிராவல்ஸ் அதிபர் மனைவியை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவை சீரநாயக்கன்பாளையம் ஜெகதீஷ் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். அவருடைய மனைவி உமாதேவி (53). இவர்களது மகன் உதயகுமார் (27). இவருக்கு திருமணமாகி இனியா (24) என்ற மனைவியும் ஒன்றரை வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. அனைவரும் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்கள்.

ராஜேந்திரன் சொந்த வேலை காரணமாக சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் இரவில் வீட்டின் கீழ்ப்பகுதியில் உமாதேவியும், வேலைக்கார பெண் ரஞ்சிதாவும் (19) படுத்து இருந்தனர். மாடியில் உள்ள அறையில் உதயகுமார், மனைவி மற்றும் குழந்தையுடன் தூங்கி கொண்டு இருந்தார்.
இந்த நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் கதவை உடைக்கும் சத்தம் கேட்டு வரவேற்பு அறையில் படுத்து இருந்த வேலைக்கார பெண் ரஞ்சிதா எழுந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து முகமூடி அணிந்த 5 பேர் உள்ளே புகுந்தனர். அவர்கள் கையில், கத்தி, அரிவாள், இரும்பு கம்பி போன்றவை வைத்திருந்தனர். அவர்களை பார்த்ததும் ரஞ்சிதா சத்தம்போட்டார்.
உடனே முகமூடி கொள்ளையர்கள் ரஞ்சிதாவின் கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போட்டால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டிஉள்ளனர். இதற்கிடையே சத்தம் கேட்டு உள் அறையில் படுத்து இருந்த உமாதேவி வெளியே வந்தார். அங்கு ரஞ்சிதா கத்திமுனையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உமாதேவி உதவி கேட்டு சத்தம் போட முயன்றார்.
அதற்குள் அந்த கும்பல் உமாதேவியை இரும்பு கம்பியால் தாக்கியது. இதில் நிலைகுலைந்த அவர் கீழே சாய்ந்தார். பின்னர் முகமூடி கொள்ளையர்கள் உமாதேவி அணிந்திருந்த தங்கநகை, வைர வளையல், கம்மல் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர். பின்னர் பீரோ சாவி எங்கே என்று கேட்டு தெரிந்து கொண்டு, வலிதாங்க முடியாமல் அலறிதுடித்த உமாதேவி பீரோ சாவியை கொள்ளையர்களிடம் கொடுத்தார். கொள்ளையர்கள் பீரோவை திறந்து அதில் இருந்த 22 பவுன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள், ரூ.1 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
பின்பு கொள்ளையர்கள் மாடிக்கு சென்று ஒவ்வொரு அறையாக தட்டினார்கள். அப்போதுதான் கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது உதயகுமாருக்கு தெரியவந்தது. இதனால் உஷாராகிக் கொண்ட உதயகுமார் அறையின் கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு, ஜன்னல் வழியாக கொள்ளை, கொள்ளை என்று கத்தியுள்ளார். இதைக்கேட்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.
சம்பவம் குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் ரம்யா பாரதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு மோப்பநாய் ‘அம்மு' வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் கையில் உறை அணிந்து இருந்ததால் தடயங்கள் எதுவும் பதிவாகவில்லை. கொள்ளைபோன தங்கம் மற்றும் வைர நகைகள், ரொக்கப்பணம் ஆகியவற்றின் மதிப்பு ரூ.10 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் நடத்தப்பட்டு வருகிறது. சீரநாயக்கன்பாளையத்தில் வீட்டில் முகமூடி அணிந்து கொள்ளையடித்த நபர்கள் ஆங்கிலத்தில் பேசி உள்ளனர். நீலிக்கோணாம்பாளையத்தில் சமீபத்தில் கொள்ளையடித்தவர்கள் ஹிந்தி கலந்த தமிழில் பேசி உள்ளனர். எனவே இந்த 2 சம்பவத்திலும் ஈடுபட்ட நபர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவோம், என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications