106 டிகிரிக்கு மேல் தகிக்கும் வெப்பம்... அனல் காற்று அதிகரிக்கும் - வானிலை எச்சரிக்கை
தமிழகம் முழுவதும் வெப்பநிலை அதிகரித்து அனல் காற்று வீசி வருகிறது. கரூரில் 106 டிகிரி, நாமக்கல், வேலூரில் 105 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னை: அக்னி நட்சத்திர வெயில் ஆரம்பிக்கும் முன்பே தமிழகத்தில் பல மாவட்டங்களில் அனல் காற்று வீசி வருகிறது. கரூரில் 106 டிகிரியும் நாமக்கல், வேலூரில் இன்று 105 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
வாட்டி வதைக்கும் வெப்பத்தினால் தமிழகத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் கானல் நீர் காட்சி தெரிகிறது. தார் உருகு ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த ஒரு வாரகாலமாகவே 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெப்பநிலை 105 டிகிரிக்கும் மேலாக பதிவாகியுள்ளது. கரூரில் நேற்று அதிகபட்சமாக 109 டிகிரி வெயில் பதிவானது. இன்றைய வெப்பநிலையும் தலையை உருக வைக்கும் அளவிற்கு கொதித்து வருகிறது.
மொட்டை மாடியில் தண்ணீர் வைத்தால் சில மணிநேரங்களில் கொதித்து விடுகிறது. வெறும் தரையில் ஆம்லேட் போடும் அளவில் வெப்பம் தகிக்கிறது என்றே கூறலாம். பல மாவட்டங்களில் இன்றும் வெப்பம் 100 டிகிரிக்கும் மேல் பதிவாகியுள்ளது.
இன்றைய வெப்பநிலை
கரூர் 106 டிகிரி பாரன்ஹீட், நாமக்கல், வேலூர் 105டிகிரி, மதுரை, திருச்சி, ஈரோடு 104 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. திருப்பூரில் 99 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. அண்டை மாவட்டமான கோவையில் 93 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. காஞ்சிபுரத்தில் 103 டிகிரி வெப்பமும், திருவள்ளூரில் 102 டிகிரி வெப்பமும் பதிவாகியுள்ளது. சென்னையில் 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
வெப்பம் அதிகரிக்கும்
கடல் பரப்பில் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக வங்கக் கடல் ஒட்டிய நிலப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடல் மட்டத்தில் வெப்பம் கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் வெப்பநிலை
இரண்டு நாட்களுக்கு 106 டிகிரி முதல் 109 டிகிரி வரை வெயிலின் உக்கிரம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று 109 டிகிரி வரை வெயில் எகிறும் நிலை ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கரூரில் நேற்று 109 டிகிரி வெப்பநிலை பதிவானது. பல மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெப்பநிலை பதிவானது.
இடியுடன் மழை
வெப்பநிலை அதிகரித்துள்ள நிலையில் வெப்பச்சலனத்தினால் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வெப்பம் அதிகரித்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. வீடுகளை விட்டு மக்கள் வெளியே வர தயங்குவதால் சாலைகள் வெறிச்சோடியுள்ளன.