உரிமைக்குழு நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு மீது நாளை விசாரணை!
உரிமைக்குழு விடுத்த நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
சென்னை: உரிமைக்குழு விவகாரத்தில் திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுக்கிறது.
சட்டப்பேரவை உரிமைக் குழு நோட்டீஸை எதிர்த்து மு.க. ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்திருந்தார். தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது என்பதை ஆதாரத்தோடு காட்டுவதற்காக திமுக உறுப்பினர்கள் மானிய கோரிக்கையின் போது அவற்றை சட்டசபைக்கு எடுத்துச் சென்றனர்.
சபாநாயகரின் அனுமதியின்றி தடை செய்யப்பட்ட குட்கா பொருளை பேரவைக்குள் கொண்டுவரக்கூடாது என்ற விதிமுறையை காரணம் காட்டி, ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வரப்பட்டது. அதுகுறித்து பரிசீலிக்க சட்டபேரவையின் உரிமை மீறல் குழுவிற்கு சபாநாயகர் தனபால் அனுப்பி வைத்தார்.
இதனையடுத்து உரிமைக்குழு கூடி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 21 எம்எல்ஏக்களுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உரிமைக்குழுவிடம் விளக்கம் அளிக்க 15 நாள் அவகாசம் கோரி கடிதம் அளித்துள்ளார். இந்நிலையில் உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில் திமுக எம்.எல்.ஏ.க்களை நீக்கிவிட்டு பெருபான்மையை நிரூபிக்க எடப்பாடி அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் திமுக எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய எடப்பாடி அரசு குறுக்கு வழியில் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருள் கடைகளில் போலீஸ் உதவியோடு விற்பனை செய்கிறார்கள். மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுரிமையை தடுக்கும் வகையில் சபாநாயகர், உரிமைக்குழு செயல்படுகிறது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
Recommended Video
சபாநாயகரும், உரிமைக்குழுவும் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுவது சட்டவிரோதமானது என்றும் திமுக தரப்பில் கூறப்பட்டத. இதனை ஏற்ற ஹைகோர்ட் வழக்கை நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.