பழைய ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுக்கும் ஆவின்.. கொள்முதலை நிறுத்த ஏஜென்டுகள் முடிவு!
பழைய ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுக்கும் ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக பால் முகவர்கள் கொள்முதல் நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
சென்னை: சில்லரை தட்டுப்பாட்டால் பால் கொள்முதல் நிறுத்த போராட்டத்தை நடத்த உள்ள தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் மற்றும் மாநில தலைவரான சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அத்தியாவசிய பொருளாக விளங்கும் பாலினை சில்லறை வணிகர்கள் வாயிலாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வரும் பால் முகவர்கள் அதிகாலையில் சில்லறை வணிகர்களுக்கு தாங்கள் விநியோகம் செய்த பாலுக்கான தொகையை மாலை 6.00மணிக்கு மேல் வசூலிக்க தொடங்கினால் வசூலினை முடிப்பதற்கு குறைந்தபட்சம் இரவு 10.00மணி ஆகி விடுகிறது. அதன் பிறகு பால் முகவர்கள் தாங்கள் வசூலித்த தொகையை எண்ணி சம்பந்தப்பட்ட பால் நிறுவனங்களிடம் மறுநாள் கொள்முதல் செய்கின்ற பாலுக்கு செலுத்துவதற்கு பிரித்து தயார் செய்து வைப்பதற்குள் நேரம் நள்ளிரவை நெருங்கி விடும்.
அதன் பிறகு பால் முகவர்கள் வீட்டிற்கு சென்று இரவு உணவு அருந்தி விட்டு சொற்ப மணித்துளிகள் மட்டும் உறங்கி விட்டு அதிகாலை மீண்டும் 3.00மணியளவில் எழுந்து சம்பந்தப்பட்ட பால் நிறுவனங்களுக்கு பணத்தை செலுத்தி பாலினை கொள்முதல் செய்து சில்லறை வணிகர்கள், தேநீர் கடைகள், உணவகங்களுக்கு பாலினை விநியோகம் செய்யும் பணியை தொடங்கி விடுவர். இது அடைமழையே பெய்தாலும், வெள்ளமே வந்தாலும், கண்ணை மறைக்கின்ற பனியே பொழிந்தாலும், வருடத்தில் 365நாட்களும் தங்குதடையின்றி தொடர்ந்து கொண்டிருக்கும் நிகழ்வாகும்.
இந்த சூழ்நிலையில் கறுப்பு பணத்தை ஒழிக்கும் நல்ல முயற்சியாக மத்திய அரசு 500ரூபாய் & 1000ரூபாய் நோட்டுகளை செல்லாது எனவும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய 500ரூபாய் & 1000ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 30ம் தேதி வரை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்தது.
ஆனால் பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய செலவினங்களுக்கு சில்லறை வணிகர்களிடம் கொடுத்து பொருள் வாங்குகின்ற காரணத்தால் சில்லறை வணிகர்களோ பொதுமக்கள் கொடுக்கும் பழைய 500ரூபாய் & 1000ரூபாய் நோட்டுக்களை இரவில் வசூலுக்கு செல்லும் பால் முகவர்களிடம் கொடுக்கின்றனர். அந்த பழைய ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுக்கும் பால் முகவர்களிடம் தாங்கள் வாங்கிய பாலுக்கான தொகையை தராமல் கடன் சொல்வதோடு, அந்த ரூபாய் நோட்டுக்களை வாங்கினால் மட்டுமே மறுநாள் பால் விநியோகம் செய்யுமாறும் இல்லையெனில் பால் தங்களுக்கு வேண்டாம் எனவும் பால் முகவர்களை நிர்பந்தம் செய்கின்றனர்.
பால் முகவர்கள் மறுநாளைக்குத் தேவையான பாலினை சம்பந்தப்பட்ட பால் நிறுவனங்களிடம் ஏற்கனவே ஆர்டர் கொடுத்திருப்பதால் அந்த ஆர்டரை ரத்து செய்ய முடிவதில்லை. அதன் காரணமாக வேறு வழியின்றி சில்லறை வணிகர்கள் தரும் பழைய 500ரூபாய் & 1000ரூபாய் நோட்டுக்களை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு பால் முகவர்கள் தள்ளப்படுகிறார்கள். அவ்வாறு பால் முகவர்கள் வாங்கி வரும் பழைய ரூபாய் நோட்டுக்களை சம்பந்தப்பட்ட பால் நிறுவனங்களிடம் கொடுத்தால் அவர்கள் வாங்க மறுப்பதோடு, புதிய ரூபாய் நோட்டுக்கள் அல்லது பழைய 100, 50ரூபாய் நோட்டுக்களை கொடுத்தால் மட்டுமே பாலினை வழங்குவோம் என பால் முகவர்களை மிரட்டுகின்றனர். "மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி" விழுவதைப் போல பால் முகவர்களுக்கு ஒருபுறம் சில்லறை வணிகர்களாலும், மறுபுறம் ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களாலும் பால் முகவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆவின் மற்றும் அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் பால் முகவர்களிடம் வாங்குகின்ற பணத்தை வங்கிகள் மூலமே பரிவர்த்தனை செய்கின்றன. ஆனால் பால் முகவர்கள் சில்லறை வணிகர்களிடமிருந்து பணத்தை வசூலித்த சில மணி நேரங்களில், அதுவும் நள்ளிரவில் சம்பந்தப்பட்ட பால் நிறுவனங்களிடம் செலுத்தியதாக வேண்டும். நிலைமை இவ்வாறு இருக்க பால் முகவர்களால் வங்கிக்கு சென்று, பழைய 500ரூபாய் & 1000ரூபாய் நோட்டுக்களை மாற்றி பால் நிறுவனங்களுக்கு செலுத்திட இயலாது.
எனவே அத்தியாவசிய பொருளாக விளங்கும் பாலினை விநியோகம் செய்யும் பால் முகவர்களிடம் இருந்து அவரவர் கொள்முதல் செய்கின்ற பாலுக்குரிய தொகையை மட்டும் சம்பந்தப்பட்ட பால் நிறுவனங்கள் வசூலிக்க மத்திய அரசு ஆணையிட தமிழக அரசு ஆவண செய்திட வேண்டும்.இல்லையெனில், பாலினை கொள்முதல் செய்ய மறுக்கும் போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். எனவே பொதுமக்கள் சிரமத்தை பொறுத்தருள வேண்டுகிறோம்.