போட்டிப்போட்டு எம்ஜிஆர் பாட்டு பாடிய திமுக அதிமுக... சட்டசபை கலகல
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சினிமா பாடலை சட்டசபையில் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பாடியதால் அவையில் சிறிது நேரம் கலகலப்பு ஏற்பட்டது.
சென்னை: சட்டசபையில் நேற்று, எம்ஜிஆர் திரைப்பட பாடலை திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பாடியதால் அவையில் சிறிது நேரம் கலகலப்பு நிலவியது.
நேற்றைய சட்டசபை கூட்டத்தில், திமுக உறுப்பினர் அன்பழகன் பேசும்போது, ' எம்ஜிஆர் -பானுமதி இணைந்து நடித்த படத்தின் பாடலான, "காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம்" என்று பானுமதி பாடியது போலத்தானே இப்போது தமிழக விவசாயிகள் நிலைமை இருக்கிறது என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட அதிமுக உறுப்பினர்கள், "எம்ஜிஆர் பாடிய கடைசி இருவரிகளைப் பாடுங்கள்" என்று கோரஸாக குரல் எழுப்பினர். ஆனால் அன்பழகன் பாடவில்லை. இதனையடுத்து அமைச்சர் துரைக்கண்ணு வழக்கமாக அவையில் பாடுவது போல, நேற்றும் பாட எழுந்தார்.
அதைக் கவனித்த எம்எல்ஏ அன்பழகன் " நீங்க நல்லா பாடுவீங்கன்னு தெரியும். உட்காருங்க " என்றார். அதற்கு அமைச்சர் துரைக்கண்ணு "அம்மா இல்லாத அவையில் பாடக்கூடாது என்று இருந்தேன். ஆனால் உங்களால் பாடவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது " என்றார்.
பின்னர் " நானே போடப்போறேன் சட்டம்... நன்மை விளையும் திட்டம் " என்று பாடினார். அதற்கு அதிமுக உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதன்பின்னர் அன்பழகன், " நாங்களும் எம்ஜிஆர் படத்தை சட்டைக் கிழிந்தாலும் பரவாயில்லை என்று தியேட்டரில் டிக்கெட் வாங்கி படம் பார்த்தவர்கள்தான். " என்று அமைச்சர் துரைக்கண்ணு பாடிய அதே வரிகளை மீண்டும் பாடி அமர்ந்தார்.