ஆறுதல் சொல்லப்போய் அடி வாங்கி கீழே விழுந்த அமைச்சர் - பழனியில் பரபரப்பு
திண்டுக்கல்: பொதுமக்களுக்கும் அதிமுகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் அதிமுக அமைச்சர் சீனிவாசன் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி அருகே உள்ள பாலசமுத்திரத்தில் புதன்கிழமை 34 குடிசைகள் எரிந்து நாசமாகின. இதில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்க திண்டுக்கல் தொகுதி எம்எல்ஏவும், வனத்துறை அமைச்சருமான சீனிவாசன், எம்.பி. உதயகுமார், யூனியன் சேர்மேன் ஏ.டி.செல்லசாமி, முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால் மற்றும் கட்சியினர் வியாழக்கிழமை சென்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து 10 ஆயிரம் ரூபாய் மற்றும் சில உணவு பொருட்கள் வழங்க பள்ளிக்கட்டிடம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தப் பள்ளியின் வெளியே பாதிக்கப்பட்ட மக்கள் சீனிவாசன் உள்ளிட்டவர்களை முற்றுகையிட்டு, 34 குடிசைகளுக்கு மேலாக எரிந்துவிட்டது. சரியாக கணக்கு எடுக்கவில்லை. தங்களுக்கு பணம் கொடுப்பதற்கு பதிலாக வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனை சமாளித்து உள்ளே சென்ற சீனிவாசன், பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் மற்றும் பொருட்களை கொடுத்துவிட்டு வெளியே வந்தார். வெளியே காத்திருந்த பொதுமக்களை பார்த்த சீனிவாசன், காரை சற்று தள்ளி நிறுத்துமாறும், நடந்து வந்து காரில் ஏறியவுடன் உடனே கார் புறப்பட வேண்டும் என்று உடன் வந்தவர்களிடம் கூறிவிட்டு வந்தார். அப்போது தங்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு மீண்டும் பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தினர்.
இதற்கு பதில் அளிக்காமல் சீனிவாசன் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தள்ளுமுள்ளு ஆனதில் சீனிவாசன் கீழே விழுந்தார். உடனே கட்சியினர் பொதுமக்களை தள்ளிவிட, பொதுமக்களும் கட்சியினரை தள்ளிவிட அந்த இடத்தில் பதட்டமானது. பின்னர் போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி, அமைச்சரை அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications