தினகரனுக்கு எதிராக பேசுவதை முதலில் நிறுத்துங்கள்..எம்எல்ஏ வெற்றிவேல் ஆவேசம்
சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரங்களை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். சசிகலா, தினகரன் குறித்து யாரும் விமர்சனம் செய்யக் கூடாது என எம்எல்ஏ வெற்றிவேல் கூறியுள்ளார்.
சென்னை அடையாறு இல்லத்தில் டிடிவி தினகரனை அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் இன்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வெற்றிவேல், அதிமுக உட்கட்சி விவகாரங்களை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகள் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். முதலில் அவர்கள் தான் தொடங்கினார்கள், அவர்கள் தான் நிறுத்த வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் குறித்து யாரும் விமர்சிக்க கூடாது.
ஆர்.கே.நகர் தேர்தலின் போது பொதுச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளரின் படங்களை கொண்ட பிரசுரங்களை அடித்தோம். அதற்கான சான்றுகள் தேர்தல் ஆணையத்திலும் உண்டு. நமது விரோதிகள் சிலர் போஸ்டர்களில் உள்ள அவர்களது படங்களை கிளித்தனர். அதனால் தான் பிரச்சினை வந்தது. மேலும் இந்த பிரச்சினையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வெற்றிவேல் கூறினார்.
முன்னதாக முருகுமாறன் உள்ளிட்ட எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர் இன்று நிருபர்களை சந்தித்தனர். அப்போது, எம்எல்ஏ வெற்றிவேல், வார்த்தைகளை உமிழ்கிறார். யாராக இருந்தாலும் நா அடக்கத்தோடு பேச வேண்டும். ஒருவர் முகத்தில் ஒருவர் விழிக்க வேண்டிவரும். நாங்கள் கூறும் கருத்திலுள்ள உண்மைகளை ஆராய வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என பேசுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியிருந்தனர்.