ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: நடத்தை விதிமீறி குழாய் பதிப்பு - தேர்தல் ஆணையத்திடம் புகார்
ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது அந்த தொகுதிக்குள்பட்ட புதுவண்ணாரப்பேட்டையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை பொதுமக்களே தடுத்து நிறுத்தினர்.
சென்னை: ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி புதுவண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதோடு தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவரது தொகுதியான ஆர்.கே. நகரில் வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
அதிமுகவில் பிளவுகள் ஏற்பட்டதாலும், பலமுனை போட்டிகள் நிலவுவதாலும் இந்தத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சசிகலா அணிக்கும், ஓபிஎஸ் அணிக்கும் தங்கள் பலத்தை நிரூபிக்கும் தேர்தலாக உள்ளது.
இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கடந்த 3 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாட்டு நிலவி வருகிறது. இது பலமுறை புகார் கொடுத்தும் பயனில்லை. இந்நிலையில் புதுவண்ணாரப்பேட்டை 38ஆவது வார்டில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி குடிநீர் குழாய் பதிப்பதற்கான பணிகள் நடைபெற்றன.
பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக அப்பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டியது.
இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். சம்பவ இடம் வந்த அதிகாரிகள் ஆய்வு செய்து பள்ளம் தோண்டும் பணியில ஈடுபட்டிருந்த ஊழியர்களை திருப்பி அனுப்பினர்.
மேலும் தேர்தல் நடத்தை விதிகள் மீறினால் புகார் கொடுக்க ரிப்பன் மாளிகையில் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருவதாகவும், 1800-4257012 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.