வங்கக்கடலில் 2 காற்றழுத்த தாழ்வு நிலைகள் - தமிழகம், புதுவையில் கனமழை எச்சரிக்கை
சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் அந்தமானுக்கு அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என்றும் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகம், புதுவையில் வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் பெய்துள்ள கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான பேர் உயிரிழந்துள்ளனர். உடமைகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன.
மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் தற்போது மழைநீர் வடிந்து வருகிறது. சில பகுதிகளில் மட்டும் இன்னும் மழைநீர் வடியாமல் தேங்கி கிடக்கிறது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக தமிழ்நாட்டில் வெயில் அடித்தது. மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றனர்.

காற்றழுத்த தாழ்வு நிலை
இந்த நிலையில் தென்மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் இன்று அதிகாலை சென்னை புறநகரில் ஆங்காங்கே மீண்டும் மழை பெய்துள்ளது. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி, கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, குன்றத்தூர், அனகாபுத்தூர், புழல், கொரட்டூர் உள்பட பல பகுதிகளில் பரவலான மழையும், மற்ற இடங்களில் சாரல் மழையும் பெய்துள்ளது

தென் மாவட்டங்களில் மழை
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பருவ மழை தொடர்ந்து பெய்ததால் இம்மாவட்டத்தில் சேர்வலாறு, அடவியநயினார், கடனாநதி, ராமநதி, கருப்பாநதி உள்ளிட்ட 7 அணைகள் நிரம்பின. கடந்த 4 தினங்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் சனிக்கிழமை நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது.

மழை நீடிப்பு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அரைமணிநேரம் பலத்த மழை பெய்தது . மேலும் லால்பேட்டை, குமராட்சி, திருநாறையூர் சுற்று வட்டார கிராமங்களிலும் மழை பெய்கிறது. செஞ்சி மற்றும் திருத்தணி சுற்று வட்டாரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.

ரமணன் எச்சரிக்கை
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரமணன், தென்மேற்கு வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, இலங்கை அருகே நிலைகொண்டுள்ளது. இதன்காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.

புதிய காற்றழுத்த தாழ்வுநிலை
தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியிருப்பதாக கூறிய ரமணன், அது மேற்கு நோக்கி நகரும் போது தமிழகம், புதுவையில் பல இடங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறியுள்ளார். கடந்த 24 மணிநேரத்தில் கன்னிமார் பகுதியி்ல் 12 செ.மீ. பாபநாசத்தில் 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications